குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு விசித்திரமான கனவு ஒன்று அடிக்கடி வருகிறது. பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் தாகமாக இருக்கும். நாய்க்குட்டி வேக வேகமாக நக்கி தண்ணீரை குடிக்குமே அதைப்போல இரு கரையும் புரண்டு செல்லும் ஆற்றில் இறங்கி தண்ணீரை நக்கி குடிக்கிறேன். எவ்வளவு குடித்தாலும் தாகம் அடங்காதது போல வெறிபிடித்தவனாக தண்ணீரை நக்குகிறேன். ஒருநாள் இந்த கனவு வந்தால் விட்டுவிடலாம் நிறைய நாட்கள் இதே போன்ற கனவு வந்துவிட்டது இதன் காரணம் என்ன?இந்த கனவு எனக்கு சொல்லும் செய்தி என்ன? என்பது புரியவில்லை தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
ரமேஷ்,
கோபிச்செட்டிபாளையம்.
மனிதர்களின் மனங்களை போலவே, அந்த மனங்களில் உதயமாகும் எண்ணங்களை போலவே, அவனது கனவும் விசித்திரமானது. வேதபாடசாலையில் வேதம் கற்பிக்கும் உபாத்தியாயர் ஒருவர் என்னிடம் கேட்டார் முட்டை சாப்பிடுவது போல கனவு காண்கிறேன் நிஜத்தில் முட்டையை நினைத்தாலே எனக்கு வாந்தி வந்துவிடும். பிறகு எப்படி கனவு வருகிறது? என்று. அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது
நாம் மிகவும் விரும்புகிற பொருள் மட்டுமல்ல, வெறுக்கிற பொருளும் கனவில் வரும் இரண்டுமே நமது மனதில் ஆழமாக பதிந்திருக்கும் எனவே கனவில் வரும் காட்சிகள் இப்படி இருக்கிறதே என்று அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது. கனவு என்றால் சினிமா மாதிரி அது எப்படி வேண்டுமானாலும் இருக்கும் எப்படி வேண்டுமானாலும் நம்மை இழுக்கும்.
பூக்கடை வைத்திருக்கும் ஒருவன் பல்லக்கில் போவது போல் கனவு கண்டால் அதில் விந்தை இல்லை. ஏனென்றால் இறைவன் செல்லும் பல்லக்கிலும், இறந்தவனை எடுத்து செல்லும் பல்லக்கிலும் பூ அலங்காரம் உண்டு. பூ வியாபாரிக்கும் சம்மந்தம் உண்டு. ஆனால் அவனே ஆகாய விமானத்தை ஒட்டி செல்வது போல கனவு கண்டால் அது விந்தை இல்லையா? மனிதன் குடிப்பதுபோல் அல்லாமல் வேறொன்று குடிப்பது போல ஆற்று தண்ணீரை குடிக்கிறேனே அது விந்தைதானே என்று இந்த கேள்வி கேட்பவர் நினைக்கலாம்
இவரது வீட்டில் அல்லது பக்கத்து வீட்டிலாவது கண்டிப்பாக நாய் வளர்க்க படவேண்டும் அது பால் குடிப்பதையோ தண்ணீர் குடிப்பதையோ தவிர்க்க முடியாமல் இவர் பார்த்திருக்க வேண்டும் அந்த பதிவு தான், ஆற்றுத்தண்ணீரை நக்கி குடிப்பது போல கனவில் வருவது அதுவும் ஒரே கனவு மீண்டும் மீண்டும் வருகிறதே அது ஏன் என்று கேட்கலாம் அதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.
இவருக்கு உறக்கத்தில் சிறுநீர் கழிக்கும் எண்ணம் எப்போதெல்லாம் ஏற்பட்டு அதை அடக்கி கொண்டு உறங்குகிறாரோ அப்போதெல்லாம் இந்த கனவு வரும் என்பது எனது எண்ணம். வேண்டுமானால் அதை பரிசோதனை செய்து பார்த்து கொள்ளலாம்.
பொதுவாக ஆற்றிலோ, குளத்திலோ தண்ணீர் குடிப்பது போன்ற கனவு வந்தால் மனதில் உள்ள வெகுநாள் ஆசை நிறைவேற போவதாகவும் கடன் அடைபடுவதாகவும் அர்த்தம். ஆற்றில் குளிப்பது போல கனவு கண்டால் துயரங்கள் விலகி இன்பம் வரப்போவதாக எடுத்து கொள்ளலாம். இப்படி நான் சொல்லவில்லை கனவு சாஸ்திரம் சொல்கிறது.