அன்பார்ந்த குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது மகள் இப்போது பனிரெண்டாவது வகுப்பு பரீட்சை எழுதியிருக்கிறாள். அவள் டாக்டராக வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்கான நுழைவுத்தேர்வில் அவள் வெற்றிபெற ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். பெரிய உதவியாக இருக்கும்.
இப்படிக்கு,
வைதேகி மாணிக்கம்,
மதுரை.
கல்வியில் முன்னேற்றமடைய சகலகலாவல்லி மாலையை பாராயணம் செய்யுங்கள் என்று பொதுவாக கூறுவது உண்டு. வைதீக முறைப்படி சரஸ்வதி ஹோமம். மேதா சூக்த பாராயணம் செய்வதும் சிறப்பு என்பார்கள். ஹயக்கிரீவ மந்திரம் சொல்வது கூட நன்மை தரும். ஆனால் இவையெல்லாம் உடனடியான பலனை தருமா? என்று கேட்டால் என்னால் ஆமாம் தருமென்று உறுதியான பதிலை தரமுடியாது.
என்னை பொறுத்தவரை, என் அனுபவத்தை பொறுத்தவரை உடனடி பலன் தரும் எளிய பரிகாரம் ஒன்று இருக்கிறது. திருச்செந்தூர் சென்று நாழி கிணற்று தீர்த்தத்தை தலையில் தெளித்து கொண்டு முப்பத்தி ஒன்பது லட்டுகளை தானம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் நுழைவுத்தேர்வு விஷயத்தில் கைமேல் பலன் கிடைக்கும்.
எல்லோராலும் உடனடியாக திருச்செந்தூர் போகமுடியாது. அப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய சாமி திருவுருவ படத்தை வைத்து ஐந்து நாட்கள், ஐந்து தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு கடைசி நாளில் மேலே சொன்னபடி லட்டுகளை சாமிக்கு படைத்து அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு விநியோகம் செய்தாலும் அதே பலனை பெறலாம்.