சுவாமிஜி அவர்களுக்கு பணிவான நமஸ்காரம். நமது வீட்டு பூஜை அறைகளில் கல் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்யலாமா? செய்தால் தவறில்லை என்று சிலரும். செய்யவே கூடாது பெரிய அபச்சாரம் என்று சிலரும் மாறி மாறி கூறுகிறார்கள். இதில் எதை நம்புவது. என்பது புரியவில்லை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகி,
ரேவதி அமர்நாத்,
பரிதாபாத்.
சுவாமி சிலைகளில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று அசைவது, இன்னொன்று அசையாதது. அசையாத மூர்த்திகளை ஆலயங்களில் அஷ்டபந்தனத்தோடு பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அசையும் சாமிகள் நம் வீட்டு பூஜையறையில் இருப்பார்கள். இவர்களுக்கு அஷ்டபந்தனமும் கிடையாது. ஆவாகன மந்திரமும் கிடையாது. நாம் தெரிந்தும்தெரியாமல் செய்கிற தப்புகளை இந்த சாமிகள் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். சொந்தவீட்டு குழந்தைகள் குறும்பு செய்தால் கஷ்டமாக இருக்காது என்பது மாதிரி நம் வீட்டு தெய்வங்களுக்கு நம் தப்பு பெரிதாகப்படாது. ஆலய மூர்த்திகள் அப்படி அல்ல, ஆகம முறைப்படி இருப்பவர்கள் அங்கு ஆச்சாரம் மிகவும் முக்கியம்.
இன்றைக்கு நாகரீகம் நிரம்ப வளர்ந்து விட்டது யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஏடாகூடங்கள் மலிந்து விட்டது. ராஜ ராஜ சோழன் மட்டும் தான் பெரிய சிலைகளை வைத்து வழிபடுவானா? நான் செய்தால் என்ன தவறு? என்று ஆள் உயர சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்கிற விதண்டாவாதிகளும் இருக்கிறார்கள் அவர்களையும் பார்த்திருக்கிறேன். சில விஷயங்களுக்கு பழைய முறைகளை கேள்விகள் கேட்காமல் அப்படியே செயல்படுத்துவது தான் உத்தமம்.
வீடுகளில் கல்சிலைகளை வைத்து பூஜை செய்வதை நமது சாஸ்திரங்கள் அனுமதிக்கவில்லை. அப்படியே செய்து தான் ஆகவேண்டுமென்று விரும்பினால் ஒரு அடிக்கும் குறைவான உயரத்தில் உள்ள சிலைகளை வைத்து பூஜை செய்யலாம். மற்ற உலோகங்களினால் செய்யப்பட்ட சிலைகளாக இருந்தாலும் கூட அவைகளும் ஒரு அடி உயரத்தை தாண்டக்கூடாது.