குருஜிக்கு பணிவான வணக்கம். எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் என் ஜாதகத்தை சமீபத்தில் கொடுத்து பார்த்தேன் அவர் அதை பார்த்துவிட்டு நீ சிறைக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு இருக்கிறது கவனத்தோடு இரு என்று கூறிவிட்டார். அன்றுமுதல் எனக்கு பயமாக இருக்கிறது. இதுவரையிலும் பெரிய தவறுகள் எதுவும் நான் செய்தது இல்லை எந்த தகராறிலும் ஈடுபட்டது கிடையாது அப்படி இருக்க நான் சிறைக்கு போவேன் என்பதை நம்ப முடியவில்லை. இருந்தாலும் எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏதாவது நடந்து ஜோதிடர் கூறியது நடந்துவிடுமோ என்று நினைத்து நினைத்து பயப்படுகிறேன். நீங்கள் என் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து பதில்தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ஜான்சென் ஜெபராஜ்,
தூத்துக்குடி.
தப்பு செய்தவன் மட்டும் தான் சிறைக்கு செல்வான் என்பது அப்பாவித்தனமான எண்ணம் சிறைக்கு சென்றவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள், கொலைக்காரர்கள், மோசடிப்பேர்வழிகள் அல்ல. அப்பாவிகளும் கூட சந்தர்ப்ப வசத்தால் உள்ளே போய்விட வேண்டியநிலை வரலாம். எந்த தவறுகளுமே செய்யாமல் அரசியல் போராட்டம் தொழிற்சங்க பிரச்சனைகள் பொதுக்காரியங்களில் பங்கெடுப்பு போன்ற எத்தனையோ நல்ல விஷயங்களுக்காகவும் சிறைபட நேரிடலாம். எனவே அதை நினைத்துக் கொண்டு அஞ்சி கிடப்பது குழந்தைத்தனமானது.
பொதுவாக ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் சந்திரனும், எட்டாமிடத்தில் சனியும் அமர்ந்துவிட்டால் மிக கண்டிப்பாக எந்த காரணமும் இல்லாமல் சிறை கோட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டிய நிலை உண்டு. உங்கள் ஜாதகமும் அப்படியே இருக்கிறது இதை நினைத்து பயப்பட வேண்டாம் என்றோ ஒருநாள் கண்டிப்பாக சாகப்போகிறோம் என்பதற்காக இன்றே சென்று சுடுகாட்டில் கட்டில் போட்டு படுத்துக் கொள்ளவா முடியும். நடக்கும் போது நடக்கட்டும் நாராயணனின் விருப்பம் போல் நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு நிம்மதியாக இருக்க வேண்டியது தான். இதை விட்டு விட்டு ஐயோ சிறைக்கு போய்விடுவோமோ என்று அஞ்சி அஞ்சி சாவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இந்தமாதிரி சிறைக்கு போகும் கிரகநிலை அமைந்தவர்கள் தினசரி பித்ரு வழிபாடு செய்யவேண்டுமென்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. இதன் அடிப்படையில் உணவு உண்பதற்கு முன்பு ஒரு கவளம் சாதமாவது காக்கைக்கு வைத்து உண்ண வேண்டும். இது தினசரி செய்ய வேண்டும். ஒருநாள் கூட மறக்காமல் வருடத்தில் ஒருமாதம் முழுமையாக காக்கைக்கு உணவு வைத்தால் சிறை செல்லும் தோஷம் குறையும். காக்கைக்கு சாதம் வைக்க முடியாத நாட்களில் அவைகளுக்கு சுண்டல், அவல், பொறி போன்றவைகளை மீன்களுக்கு வழங்கலாம் நல்ல பலனை கண்டிப்பாக பெறலாம்.