குருஜி அவர்களுக்கு வணக்கம். என் அத்தை மகன் என்னை காதலிக்கிறார். நானும் அவரும் சிறுவயது முதலே அன்பு செலுத்தி வருகிறோம். இருவரும் பிரியவே முடியாது என்ற நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் அவர்கள் வீட்டிற்கும், எங்கள் வீட்டிற்கும் குடும்ப பிரச்சனையால் சொத்து தகராறு வந்துவிட்டது. எனவே என் தகப்பனார் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு தடை போடுகிறார். தடையை நேரடியாக போடாமல், என் ஜாதகப்படி அத்தை மகனை மணந்தால் அவனுக்கு ஆகாது. விரைவில் செத்துப்போய்விடுவான் என்று என்னை மிரட்டுகிறார். உண்மையாகவே என் ஜாதகப்படி அப்படி என்றால், நான் அவனை திருமணம் செய்யாமல் கன்னியாகவே இருந்து விடுகிறேன். அவன் எந்த வகையிலாவது நன்றாக வாழவேண்டும். ஆனால் இப்படி ஒரு பொய்யை கூறி எங்களை என் தகப்பனார் பிரிக்க நினைத்தால், அதை நான் ஏற்கப்போவதில்லை அவரை எதிர்த்தாவது அத்தை மகனின் கரம் பிடிப்பேன். எனக்கு சரியான வழி எதுவென்று தெளிவாக கூறுங்கள்.
இப்படிக்கு,
காஞ்சனா,
தூத்துக்குடி.
உங்கள் கடிதத்திலிருந்தே நீங்கள் கொண்டிருக்கும் காதலின் பலம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையை சொல்வது என்றால் காதலித்த ஒவ்வொருவரும் உங்களைப்போன்று உறுதியோடு இருந்தால் பாதி தற்கொலைகள் நிகழவே நிகழாது.
ஒருவர் ஜாதகத்தில் ஏழாமிடத்து அதிபதி, ஐந்தில் இருந்தால் அல்லது ஐந்தாம் அதிபதி ஏழாமிடத்தில் இருந்தால் அவர்கள் அத்தை அல்லது மாமன் பிள்ளைகளை தான் மணப்பார்கள் என்பது பொது விதி. இது உங்கள் ஜாதகப்படி சரியாகவே இருக்கிறது. மேலும் உங்கள் அத்தை மகனின் ஜாதகமும் வலுவோடு இருப்பதனால் இருவரும் திருமணம் செய்தால் எந்த குறையும் வராது. எனவே வீணான அச்சங்களை தூக்கி எறிந்துவிட்டு குடும்ப தகராறை முடிவிற்கு கொண்டுவந்து பெற்றோர்களின் ஒப்புதலோடு திருமணம் நடத்தப்போராடுங்கள் இந்த உறுதியை இங்கே காட்டுங்கள்.