குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது திறமைகள் நிர்வாகத்தால், பயன்படுத்தப்படுகிறதே தவிர, அதற்கான அங்கீகாரமும், ஊதியமும் கொடுக்கப்படுவது இல்லை. இதனால், மனச்சோர்வு ஏற்படுகிறது. வீட்டில் உள்ளவர்களிடம், கோபமாக நடந்து கொள்கிறேன். குடும்ப வாழ்வில் நிம்மதி என்பது குறைந்துக் கொண்டே வருகிறது. இதற்கு என்ன செய்யலாம்? நல்ல வழி காட்டவும்.
இப்படிக்கு,
கெளரி சங்கர்,
மலேசியா.
உங்கள் ஜாதகத்தில், குரு – சூரியன் - செவ்வாய் ஆகிய மூன்று கிரஹங்களும் கூட்டணி அமைத்துள்ளன. மூன்றுமே பலமான அணிகளாகும். ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுப்பது என்பது நடக்காத காரியம். இதனால், உங்களுக்கு நல்ல மனதிடம் இருக்கும், சிறந்த திறமை இருக்கும். ஆனால், எதற்கு கோபப்படுவது, எதற்கு படக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாது. வேண்டாத வேளையில் கோபமும், சந்தோசமும் வரும். இதனாலேயே தான் பல இடைஞ்சல்களை சந்திக்கிறீர்கள்.
இந்தமாதிரி கிரகங்கள் சேர்ந்திருந்தால், யாரையும் சுலபமாக நம்பி விடுவதும், பிறகு ஏமாறுவதும் சகஜமாக நடக்கும். நிர்வாகத்தை நடத்துவதில் நல்ல நிபுணத்துவம் இருந்தாலும், தானே கணக்கிட்டு, தானே செயல்படுகிற திறமை உங்களிடம் அவ்வளவாக இல்லை. யாரோ ஒருவர் கோடு கிழித்து கொடுத்தால், நீங்கள் ரோடு போடுவீர்கள். எனவே நீங்கள் சுயமாகத் தொழில் செய்யும் திறமை இல்லாது இருக்கிறீர்கள்.
இதனால், உங்களுக்கு அங்கீகாரம் வேண்டுமென்றால், இறைவனிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை. உங்கள் ஊரில் உள்ள முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சென்று வழிபடுங்கள். சேனாதிபதியான இறைவன் உங்களது துயர்களை துடைத்து, இன்பம் தருவான்.