ஸ்வாமிஜி அவர்களுக்கு, நமஸ்காரம். உங்கள் இணையதளத்தை இரண்டு வருஷ காலமாக வாசித்து வருகிறேன். நமது சனாதன தர்மம், சாஸ்திரம், ஜோதிஷம் போன்ற விஷ்யாதிகளை சாங்கோ பாங்கமாக, பிரஸ்தாபித்து வருகிறேள். மனசுக்கு சந்தோசமா இருக்கு. எனக்கொரு சங்கல்பம் உங்களிடம் உண்டு. இந்த மாதிரியான சத் காரியங்களை தொடர்ந்து பண்ணி வாருங்கள். உங்களை போன்ற சத் ஆத்மாக்கள், இக்காரியம் பண்ணினால் தான் மற்ற மனுஷாள் நம்பிக்கையோடு கேட்டு நல்ல விதமா நடப்பா. எனக்கொரு உபாயம் நீங்கள் பண்ணனும். என் பேரன், அடிக்கடி துர்சொப்பனம் கண்டு சங்கடப்படுகிறான். அவனை மாதிரி மற்ற குழந்தைகளும் துர்சொப்பனத்தால் அவஸ்தை பட கூடும் அல்லவா? அதனால் நீங்கள் துர்சொப்பனம் வராமல் தடுக்கும் சுலோகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ ரொம்ப உபகாரமா இருக்கும். எனக்கு தெரிந்தளவில் எழுதி இருக்கேன். தப்பேதும் இருந்தால், அபசாரமா கருதாம சமிக்கணும்.
இப்படிக்கு,
ராமச்சந்திரன்,
மைலாப்பூர்.
பிரமோத்திர புராணம் என்று அழகான புராணம் இருக்கிறது. இதில்,
துஸ் ஸ்வப்ன துஸ் சகுன துர்கதி தெளர் மனஸ்ய
துர்பிஷ துர்வ்யசன துஸ்ஸஹ துர்ய ஸாம்ஸி
உத்பாத தாப விஷபீதிமஸத் க்ரஹாரத்தம்
வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ
என்ற ஒரு சுலோகம் வருகிறது. இதை இரவு உறங்கப்போவதற்கு முன்பு, படுக்கையில் உட்கார்ந்தோ, அல்லது படுத்த வண்ணமோ கூட இரண்டு கைகளையும் மார்பு மீது வைத்துக்கொண்டு, பதினொரு முறை சொல்ல வேண்டும். இப்படி சொன்னால் கெட்ட கனவுகள் வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவென்று சிலர் கேட்கலாம். கெட்ட சொப்பனம், தீய சகுனம், வறுமை, மன கலக்கம், கொடிய துக்கம், பஞ்சம், அவமானம், பூகம்பம் மற்றும் புயல் போன்ற விரும்பத்தகாத காரியங்களும், கிரஹக்கோளாறுகளால் ஏற்படும் துயரங்களும், வியாதிகளும் லோக நாயகனான பரமேஸ்வரனனால் நாசம் செய்யப்படட்டும். அவர் என்னை காப்பாற்றட்டும் என்பது பொருளாகும்.
சுருக்கமாக சொன்னால், சிவபெருமானை பிரார்த்தனை செய்வதே கெட்ட சொப்பனம் நீங்க எளிய வழி எனலாம். அதற்கு இந்த சுலோகம் ஆற்று வெள்ளத்தில் பயணம் செய்ய பயன்படும் படகு போல துணை செய்யும்.