பாசம் மிகுந்த குருஜி அவர்களுக்கு, உங்கள் பாதங்களில் வணங்கி ஒரு கேள்வி கேட்கிறேன். வேற்று மதத்தை சேர்ந்தவள் என்று, என் கேள்விக்கு பதில் சொல்லாமல், விட்டு விடாதீர்கள். நான் உங்களை என் தகப்பன் போல பாவித்துக் கேட்கிறேன். நானும், என் கணவரும் வேலைக்கு செல்கிறோம். எனக்கு குழந்தை பிறந்து, மூன்று மாதங்கள் ஆகிறது. ஊரிலிருந்து, அம்மா வந்து இதுவரை குழந்தையை கவனித்துக் கொண்டார்கள். இனிமேலும், அவர்கள் இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க இயலாது. காரணம் ஊரில் அவர்கள், அப்பாவை கவனிக்கச் செல்ல வேண்டும். எனக்கு மாமியாரும் கிடையாது. நாங்கள் இரண்டு பேரும் வேலைக்கு போவதனால், குழந்தையை கவனிப்பது பெரிய சங்கடமாகி விடும். குழந்தை காப்பகங்களில், குழந்தையை விடுவதற்கும் எனக்கு மனமில்லை. ஊரில் நல்ல பெண்ணாக வேலைக்கு தேடச் சொல்லியிருக்கிறேன். என் குழந்தை நலத்தை முன்னிட்டு, உங்களிடம் தாழ்மையுடன் கேட்கிறேன். வேலைக்கு பெண் கிடைப்பாளா? கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
இப்படிக்கு,
மார்கிரட் குளோரி,
கனடா.
ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நான், மிகத் தீவிரமான மதநம்பிக்கை உடையவன். என் மதத்தின் மேல் எனக்கு நிறைய அபிமானம் உண்டு. அதே நேரம் மற்றவர்களின் மத நம்பிக்கையை, குறைவுப்படுத்தி பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. காரணம் மதம் என்பது, சிறந்த பண்பாடே தவிர, அது மோட்சத்திற்கான வழியில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
கடவுள் இந்து அல்ல, கிறிஸ்தவன் அல்ல, இஸ்லாமியன் அல்ல, பெளத்தம், ஜைனம் இப்படி எந்த மதத்தை சேர்ந்தவனும் அல்ல. அவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். மனிதர்களை தனது குழந்தையாக பார்ப்பானே தவிர ஒருபோதும் மதம் என்ற போர்வையில் பார்க்க மாட்டான். ஆனால், பல மனிதர்களுக்கு இந்த ரகசியம் தெரியாமல் தான், தங்கள் மதத்தில் வந்து சேராவிட்டால் கடவுள் தண்டிப்பார் என்று பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள் அவர்கள் ஐயோ பாவம் ரகம்.
கண்ணன் என் சேவகன் என்று, கண்ணனை வேலைக்காரனாக பாவித்து பாரதி பாடியபோது பணியாளர்களால் பட்ட துயரங்களை பட்டியல் போடுவார்.
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்.
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
இது பாரதியார் விளையாட்டிற்காக கண்ணனை கொஞ்சுவதற்காக எழுதிய பட்டியல் என்று, யாரும் நினைக்க வேண்டாம். உண்மையாகவே, வேலைக்காரர்கள் இத்தனை லீலைகள் செய்கிறார்கள். அனுபவ பட்டவர்களுக்கு இது நன்றாக தெரியும். விசுவாசமான வேலைக்காரன் கிடைப்பதும், அறிவாளியான பெண்டாட்டி அமைவதும், அதிர்ஷ்டம் உடையவர்களுக்கு மட்டுமே நடக்கும் காரியம்.
நீங்கள் குழந்தை வளர்ப்பதற்காக, வேலைக்காரி வேண்டும் என்று கேட்கிறீர்கள். சந்தோஷம் எனக்கொரு சந்தேகம் வருகிறது. கணவன் மனைவி இரண்டுபேருமே சம்பாதிப்பது, குழந்தைகளுக்கு தான் என்று பேசுகிறீர்கள். அந்த குழந்தையை கவனிக்க முடியாத சம்பாத்தியம் எதற்கு என்பது என் கேள்வி. வேலைக்காரி குழந்தைக்கு உணவு தருவாள், உடை தருவாள், தாய் பாசத்தை தரமுடியுமா? அதை தாயால் மட்டும் தான் கொடுக்க முடியும். தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள் குழந்தை வளர்ந்து, அவன் காரியத்தை அவனே பார்த்துக்கொள்ளும் நாள் வரையில், நீங்கள் யாராவது ஒருவர் வீட்டில் தங்கலாமே? பணத்தை வைத்துக் கொண்டு, சுகபோகம் வாங்கலாம். சுகத்தை வாங்க முடியாது.
இப்போது ஜோதிடத்துக்கு வருகிறேன், உங்கள் ராசிப்படி நல்ல வேலைக்காரி அமைவாள். அதில், எந்த மாற்றமும் இல்லை. அதற்காக நீங்கள் எந்த பரிகாரமும் செய்ய வேண்டிய நிலை இல்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும், உங்களால் முடிந்தவரை பறவைகளுக்கு உணவு கொடுங்கள். நல்ல பணியாள் கண்டிப்பாக அமைவாள்.