குருஜி ஐயா அவர்களுக்கு, வணக்கம். எனக்கு எதைக்கண்டாலும், பயமாக இருக்கிறது. திடீரென்று என் வாழ்க்கை சீர்கெட்டு நடுத்தெருவிற்கு வந்துவிடுவேனோ? என்று அச்சம் வருகிறது. இது காரணமே இல்லாத பயம் என்று தோன்றுகிறதே தவிர, ஆனாலும் என்னையும் மீறி அச்ச உணர்வு மேலோங்கி நிற்கிறது. அதிலிருந்து நான் மீண்டுவர என்ன செய்ய வேண்டும்? தக்க வழிமுறையை கூறி எனக்கு வாழ்வளிக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகன்,
வின்சன்ட் ராபட்,
தூத்துக்குடி.
ஜாக்கிரதை உணர்வு பழுத்த பழமாக வருவதற்கு பெயர் தான் பயம் என்பது. யார் தன்னைப்பற்றி மட்டுமே அதிக நேரம் நினைத்துக் கொண்டு இருக்கிறார்களோ? அவர்களுக்கு இந்த பய உணர்வு ஜாஸ்தி.
பயத்தை போக்கி, அபயம் அளிக்கும் சக்தி இறைவனுக்கும், இறை நாமத்துக்கு மட்டுமே உண்டு. உங்கள் ஜாதகப்படி உங்களுக்கான அதிதேவதை சிவபெருமான். நீங்கள் கிறிஸ்தவராக இருந்தாலும் கூட, ஜாதகப்படி இருக்கின்ற தெய்வத்தின் ஆற்றலே உங்களை காக்க வல்லதாக இருக்கும்.
எனவே நீங்கள் திருமூலர் அருளிச்செய்த திருமந்திரத்தில் உள்ள, சிவ சிவ என்கிலர் தீவினையாளர் என்ற மந்திர பாடலை தினசரி இருபத்தியெழுமுறை காலையிலும், மாலையிலும் சொல்லிவாருங்கள். அச்சம் விலகி ஆண்மையின் வீரம் தானாக வரும்.