சுவாமிஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு இருபத்தாறு வயதாகிறது. ஓரளவு படித்திருக்கிறேன். வேலையும் செய்கிறேன். எனக்கு உள்ள ஒரே குறை கூச்ச சுபாவம். யாரைப் பார்த்தாலும், தயக்கமாக இருக்கிறது. என் கருத்துக்களை சொல்லுவதற்கு வெட்கமாகவும் இருக்கிறது. ஏதாவது தவறுதலாக பேசி விடுவேனோ என்று பயமாகவும் இருக்கிறது. இதனால் எனது வேலையில் இடைஞ்சல் வருகிறது. இதை நீக்க நான் என்ன செய்யவேண்டும்?
இப்படிக்கு,
ராஜேஷ்குமார்,
சிவகங்கை.
உங்கள் கேள்வியை பார்த்தவுடன் பரிகாரம் செய்வதற்கு நீங்கள் மிக தூரமாக பயணம் செய்ய வேண்டியது வருமோ? என்று நினைத்தேன். ஆனால், உங்கள் ஊரைப் படித்தவுடன், நீங்கள் இந்த சிக்கலிலிருந்து மிக வேகமாக விடுபட்டு விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.
சிவகங்கை பக்கத்தில், வைரவன் பட்டி என்ற அழகான ஊர் இருக்கிறது. அங்கே பைரவருக்கு ஒரு கோவில் உண்டு. நீங்கள் அந்த கோவிலுக்கு சென்று பைரவருக்கு பிடித்தமான தயிர் சாதம் படைத்து, இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை, ஒன்பது பிச்சைக்காரர்களுக்கு அன்னதானமாக வழங்குங்கள்.
நான் வைஷ்ணவன் பைரவர் கோவிலுக்கெல்லாம் போகமுடியாது என்று சொல்கிறீர்களா? கவலை வேண்டாம். பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, நரசிம்மர் சன்னதியில் பானகம் படைத்து, படைத்த பானகத்தை பதினைந்து சிறுவர்களுக்கு வழங்குங்கள். மேலும், நரசிம்மர் தீர்த்தத்தை முகத்தில் தெளித்து கொள்ளுங்கள்.
இப்படி தொடர்ந்து செய்ய செய்ய உங்கள் பயமும், கூச்ச சுபாவமும் படிப்படியாக குறைந்து போய்விடும். கடவுளை நம்புங்கள். கவலை மறந்துவிடுங்கள்.