மரியாதைக்குரிய குருஜி ஐயா அவர்களுக்கு, பிரான்ஸ் நாட்டிலிருந்து புவனேந்திரன் எழுதுவது. ஐயா, எனக்கு திருமணம் முடிந்து, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆண்குழந்தை இல்லை என் மனைவி ஆண்வாரிசு வேண்டுமென்று விரும்புகிறாள். அவளது ஆசை நிறைவேறுமா? எனக்கு வாரிசு கிடைக்குமா? என்பதை குருஜி அவர்கள் கணித்து கூறும்படி பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
புவனேந்திரன்,
பிரான்ஸ்.
ஆஸ்திக்கு ஒரு ஆண்குழந்தை வேண்டுமென்று நமது பெரியவர்கள் அன்று சொன்னார்கள். அதற்கு காரணம் பெண்ணாக பிறந்தவள் புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவாள். வேறொரு குடும்பத்தை விருத்தி செய்வதற்கு பிறந்த இடம் மாறிவிடுவாள். ஆணாக இருந்தால் தான், காலம் முழுவதும் தாய் தகப்பனோடு இருப்பான். குடும்பத்தின் நடைமுறைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வான் என்று கருதி அப்படி கூறினார்கள்.
நமது முன்னோர்கள் மட்டுமல்ல. தந்தைவழி சமூகம் இருக்கும் எல்லா நாட்டு மக்களுமே அப்படித்தான் கருதுவார்கள். ஆனால், இன்று நிலைமை வேறாக இருக்கிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சமமான உரிமை உடையவர்கள் என்ற தர்மம் பிறந்துவிட்டது. இறைவனது படைப்பில் ஆண்-பெண் இருவருமே சமமானவர்கள். ஆணினம் மட்டும்தான் தலைமுறைகளை பாதுகாக்கும் என்ற கதைகளெல்லாம் கட்டி சுருட்டி கக்கத்தில் வைக்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது. எனவே, ஆண் குழந்தை வேண்டும் என்று அடம்பிடிப்பது ஆரோக்கியமற்ற மனநிலையே குறிக்கும்.
எந்த குழந்தையாக இருந்தாலும், அது நல்ல குழந்தையாக கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்த குழந்தையாக அதர்மத்தை செய்ய தயங்கும் குழந்தையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் சிறந்த பெற்றோர்களின் தலையாய கடமை என்று நான் நினைக்கிறேன். தாயோ தகப்பனோ இறந்துவிட்டால் கொள்ளி வைப்பதற்கு ஆண்குழந்தை வேண்டுமே என்று நீங்கள் கேட்கலாம். ஆண் குழந்தை தான் கொள்ளி வைக்கவேண்டும் என்ற கட்டாயத்தை எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை என்பதை அறிந்துகொண்டால் உள்ளத்தில் தெளிவு பிறக்கும்.
இருந்தாலும் கேள்வி கேட்பவருக்கு புத்தி சொல்வதற்கு மட்டுமே என்னால் முடியும். மற்ற விவகாரங்களில் எல்லாம் தலையிட மாட்டேன் என்பது பெரியமனித தன்மை அல்ல. ஒருவர் நம்மை மதித்து கேள்வி கேட்கிறார் என்றால், அவருக்கு புத்தியும் சொல்லவேண்டும், வழியும் காட்டவேண்டும் இதுதான் சிறந்த பண்பு. எனவே, அவரது கேள்விக்கு நடைமுறைக்கு உகந்த பதிலை சொல்வது நம் கடமை என்று கருதுகிறேன்.
உங்கள் கணவன் - மனைவி இருவரின் ஜாதகப்படியும், விதிப்படியும் ஆண்குழந்தை என்பது உங்கள் சொந்த இரத்தத்தில் பிறப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்காக, நீங்கள் எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைக்கும் என்பது போல்தான். எனவே, நீங்கள் ஆண்வாரிசு கண்டிப்பாக வேண்டும் என்றால் சுவிகாரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டு அதிபதி, இராகு அல்லது கேதுவோடு இணைந்து எட்டாவது இடத்தில் இருந்தால், இந்த கிரகங்களோடு சூரியன் எந்த வகையிலாவது சம்மந்தபட்டு இருந்தால் தத்துப் பிள்ளையை எடுத்து கொள்வார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே உங்களுக்கான பதில் சுவிகாரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதே ஆகும்.