கண்ணனை நினைத்து கண்ணனை நினைத்து
கருந்தேள் கொடுக்கும் பூவானது
கண்ணனை நினைத்து கண்ணனை நினைத்து
கருநாக பாம்பும் அமுதானது
கண்ணன் நினைவுகள் நெஞ்சில் நிறைந்தால்
கண்ணீர் மறைந்து வசந்தமே
கண்ணன் நினைவில் தன்னை மறந்தால்
காலங்கள் தோறும் சுகந்தமே
கோகுல கண்ணனை நினைத்த மண்புழு
சிறகுகள் முளைத்து பறந்தது
கோகுல நாதனை நினைத்த வன்புலி
வேட்டை மானை அணைத்தது
கோகுல கீதம் கேட்ட மல்லிகை
மீண்டும் மலர துடித்தது
கோகுல நர்த்தனம் பார்த்த சூரியன்
மேற்கில் மறைய மறந்தது
கண்ணனை தொட்ட யமுனை நதியும்
கங்கை போல குளிர்ந்தது
கண்ணனை தொட்ட கோபியர் நகமும்
வானில் நிலவாய் முளைத்தது
கண்ணனை நுகர்ந்த வலம்புரி சங்கும்
பிரணவ ஒலியாய் ஒலித்தது
கண்ணன் அணிந்த துளசி மணிகள்
விண்மீன் கூட்டமாய் வளர்ந்தது
கண்ணனை நினைத்து கண்ணனை நினைத்து
காடும் வைரம் தந்தது
கண்ணனை நினைத்து கண்ணனை நினைத்து
எரிமலை நெருப்பும் அணைந்தது
கண்ணனை நினைக்க காலம் இருந்தும்
ஆசை நெருப்பை வளர்த்தால்
கண்கள் இருந்தும் குருடாய் ஆன
சாம்பலாய் நம் கதை முடியும்.