குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். இல்லற வாழ்க்கையில் கணவன்- மனைவி உறவு என்பது மிக முக்கியமானது என்று நீங்கள் அறிவீர்கள். அந்த முக்கியமான தாம்பத்திய உறவை மாதத்தில் எல்லா நாட்களும் வைத்து கொள்ளக் கூடாது சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாகவும் அறிகிறேன். ஆனால், அவைகள் எந்தெந்த நாட்கள் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. தாங்கள் அதைப் பற்றிய விபரங்கள் தந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.
இப்படிக்கு,
முத்துராமலிங்கம்,
கூடங்குளம்.
துறவற வாழ்க்கைக்கு எப்படி பிரம்மச்சரியம் முக்கியமோ, அதே போன்று இல்லறத்திற்கு தாம்பத்திய உறவும் முக்கியம். கணவன்-மனைவி இருவரும் அன்பாலும், பரஸ்பரம் இணக்கத்தாலும் ஒருங்கிணைந்து, சமுதாய வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவையான குழந்தைச் செல்வத்தை கொடுக்க வேண்டியது அவர்களது கடமை.
அதாவது மழலைச் செல்வத்தை பெறுவதற்காக மட்டுமே, தாம்பத்திய உறவு வேண்டுமே தவிர, கீழ்த்தரமான உடல் உணர்ச்சிக்காக தாம்பத்திய உறவு பயன்படக் கூடாது. அப்படி பயன்படுத்துவது மனிதனை அவனது எண்ணத்தை, ஆத்மாவின் வளர்ச்சிப் பாதையை மிக கண்டிப்பாக தடுத்துவிடும்.
இல்லற வழியிலான தாம்பத்திய உறவு, விஞ்ஞானப்பூர்வமாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. சித்தர்களின் தலைவரான திருமூலர் தமது புகழ்பெற்ற திருமந்திர நூலில்,
மாதா உதரம் மலமகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உத்தரத்தில் வைத்த குழவிக்கே
என்று சொல்கிறார். அதாவது பெண்ணின் உடம்பில், மலம் தங்கியிருக்கின்ற போது உடலுறவு கொண்டு குழந்தை உருவானால் மந்தமாக, அறிவற்றதாக இருக்கும் என்றும், சிறுநீர் அதிகம் இருக்கும் இருக்கும் போது, குழந்தை உருவானால் ஊமை அல்லது செவிட்டுத் தன்மையோடு குழந்தை உருவாகும் என்றும், மலஜலம் இரண்டுமே இருக்கும் போது குழந்தை உருவானால் கண்கள் இல்லாமல் பிறக்கும் என்றும் தெளிவாக கூறுகிறார்.
இது மட்டுமல்ல அஷ்டமி, சதுர்தசி, பெளர்ணமி, அமாவாசை, சூரிய-சந்திர கிரஹண நாட்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்த நாட்கள் போன்றவற்றிலும் ஆண்-பெண் சேர்க்கை கூடாது என்று நமது இந்து மத சாஸ்திரங்கள் மிகத் தெளிவாக கூறுகின்றன. இவைகளுக்கான காரணம் ஆரோக்கியம் இல்லாத குழந்தைகள் பிறக்கும் என்பதே ஆகும். எனவே சரியான நாட்களில் கணவன்-மனைவி இருவரும் இணைய வேண்டும் என்பதே நமது நாட்டு அனுபவம் வாய்ந்த முன்னோர்களின் முடிவு.