Store
  Store
  Store
  Store
  Store
  Store

முஸ்லிம்களை வெல்ல வழி !




   சும்பொன் முத்துராமலிங்க தேவரிடம் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனாலும் தேசியம், தெய்வீகம் என்பனவற்றில் அவர் கொண்ட ஆத்மார்த்தமான ஈடுபாட்டையும், செயலையும் யாரும் விமர்சனம் செய்ய இயலாது. தேவரைப் போன்ற தலைவர்கள் அதாவது தேசத்தை பக்தி பூர்வமாக நேசிக்கின்ற தலைவர்கள் இன்று இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம். சமீபகாலமாக நம் நாடு முழுவதும் நடந்து வரும் நிகழ்வுகளை ஊன்றி கவனிக்கின்ற போது, மகிழ்ச்சி தருகின்ற அம்சம் சிறிது குறைவாக இருப்பதை உணர முடிகிறது. இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாட்டினுடைய பண்பாட்டு கூறுகளையும் இரண்டு பகுதிகளாக பிரிக்கின்ற விபரீதம் நடந்து வருவதை வேதனையோடு பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.


திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரையில் சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இந்த தேசத்தில் குறைந்து வருவதாக ஒரு கருத்து பரவலாக வளர்ந்து வருகிறது. பல சிறுபான்மை அரசியல் இயக்கங்கள் தங்களது சொந்த வளர்ச்சிக்காக அச்சமூட்டும் கருத்துக்கள் பலவற்றை மேடைகளில் பேசி வருகிறார்கள். மேடை பேச்சு மேடையோடு போச்சு என்ற நிலை இருந்தால் பரவாயில்லை. ஆனால், மேடை கதாநாயகர்கள் பலருக்கு வெகுஜன ஊடகங்கள் பல முக்கியத்துவம் கொடுத்து, சிறிய விஷயங்களை கூட பூதாகரப்படுத்தி பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள்.

சிறுபான்மை இயக்கங்கள் இப்படி செயல்படுகிறது என்றால், தங்களை இந்து மத பாதுகாவலர்கள் என்று தாங்களே அழைத்துக் கொள்ளும் சில பெரும்பான்மை இயக்கங்கள் விஷமத்தனமான கருத்துக்களை தினசரி பொழிந்து வருகிறார்கள். அரசியலில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் மக்களுக்கு வழிகாட்ட கூடிய தகுதி படைத்தவர்களும் பேச கூடாதவற்றை பேசி நாட்டில் தேவையற்றை விவாதங்களை கிளப்பி வருகிறார்கள். எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல இந்திய அரசாங்கத்தை நடத்துகிற ஆட்சியாளர்களும், முக்கியமற்ற சில விஷயங்களுக்கு பதாதைகள் கட்டுகிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால் நெருப்பு போல நாலா புறமும் எரிந்து கொண்டிருக்கின்ற மாட்டு மாமிச நிகழ்வுகளை சொல்லலாம்.

இந்தியாவில் சில மாநிலங்களை தவிர மற்ற பல மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டம் இருக்கிறது. இது இன்று நேற்று உள்ளது அல்ல. நேருவின் காலம் தொட்டே இருந்து வருகிறது. நமது நாட்டின் முதல் குடியரசு தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் பொது சிவில் சட்டம், பசு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை வலியுறுத்தி குடியரசு மாளிகைக்கும் பிரதம மந்திரி அலுவலகத்திற்கும் பனிப்போரை நடத்திய போது அந்த போர் தேசம் முழுவதும் உள்ள அறிவாளிகளின் விவாதத்திற்கு மூலப் பொருளாக அமைந்த போது, நேரு அந்த பிரச்சனையை தற்காலமாக நிறுத்தி கொள்ள பசு பாதுகாப்பு சட்டத்தை தேவைப்படும் மாநிலங்கள் வைத்துக் கொள்ளலாம் என்ற நியதியை வகுத்து கொடுத்தார். அவருடைய  எண்ணத்தை பின்பற்றி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அந்த சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அது சரியான முறையில் அமுல்படுத்தப்படுகிறதா என்பது வேறு விஷயம்.

ஆனால், இன்று புதியதாக மோடி அரசு இந்த விஷயத்தில் வாய்திறந்த போது சில இந்துத்வா அமைப்புகள் உத்திரபிரதேசம், கர்நாடகம், பிகார் போன்ற மாநிலங்களில் கொலை வெறி தாண்டவத்தை நடத்திவிட்டன. இதைப் போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொன்று தொட்டு நடந்து வருவதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் அப்போதெல்லாம் பெரிதுபடுத்த படாத இந்த மாதிரி சங்கதிகள் இப்போது பெரியதாக விஸ்வரூபம் எடுத்திருப்பது மத்திய அரசாங்கத்தின் சில தேவையற்ற கருத்துக்களால் என்பதை யாரும் மறுக்க இயலாது.

உண்மையில் இந்த நாட்டில் பசுமாடுகள் பாதுகாக்கப் படுகின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று பசு என்ற பெயரில் இருக்கின்ற பெருவாரியான பால் தரும் மாடுகள் பசுவின் இனமே அல்ல என்பது எனது அசைக்க முடியாத எண்ணம். மாடு மேய்க்கும் சுப்பனிலிருந்து, விமானம் ஓட்டும் குப்பன் வரையிலும் பசு என்றால் “அம்மா” என்று அழைக்கும் என்பதை அறிந்திருப்பான். ஆனால் இன்றிருக்கும் பால் கொடுக்கும் இந்த ஜீவன்கள் குரல் கொடுப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். யானை பிளிறுகிறதா? சிங்கம் கர்ஜிக்கிறதா? என்ற சந்தேகப்படும் அளவிற்கு வித்தியாசமான முறையில் குரல் எழுப்புகின்றன. இவைகளுக்கு கொம்பும் கிடையாது. திமிலும் கிடையாது. “அம்மா” என்று அழைப்பதும், கொம்பும், திமிலும் இருப்பதும் மட்டுமே பசுவின் இலட்சணம் என்று நமது பெரியவர்கள் கூறுகிறார்கள். அப்படி இவைகள் இல்லை. உண்மையாகவே பசு என்று அழைக்கபடுவது நாட்டுமாடுகள் என்று ஒதுக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்து போகக்கூடிய இனமாக இருக்கிறது. பசுவை பாதுகாக்க விரும்புபவர்கள் முதலில் இந்த சிக்கலுக்கு முடிவு கட்டி விட்டு மாமிசம் உண்பதை பற்றி பேசலாம் என்று நான் கருதுகிறேன்.

பசுவுக்கும், பசுவை வளர்க்கும் உழவனுக்கும் எந்த நல்லதையும் செய்ய முடியாத இந்த பசுநேசர்கள் திடீரென்று பசுவதையை பற்றி பேசுவதில் சந்தேகம் இருக்கிறது. இஸ்லாமியர்களை சீண்ட வேண்டும், அவர்களை சீண்டி விட்டு இந்துக்களிடமிருந்து அவர்களை முற்றிலுமாக பிரிக்க வேண்டும். என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதாக நம்புகிறேன். அப்படி இந்துக்களை தனியாக பிரித்தெடுத்தால், இந்துத்துவா ஒட்டு வங்கி என்பதை உருவாக்கி விடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது பதவிக்கு சுகம் தரக்கூடிய செயலே தவிர, பாரதத்திற்கு ஜெயம் தரக்கூடிய செயல் அல்ல. சுவாமி விவேகானந்தரின் கருத்துப்படி முஸ்லிம்களும், ஹிந்துக்களும் இந்த நாட்டின் உடம்பாகவும், உயிராகவும் இருந்தால் மட்டுமே உலகத்திற்கு தலைமை தாங்ககூடிய அந்தஸ்தை நாம் பெறுவோம். நமக்குள் ஏற்படுகிற பிரிவினைகள் என்றுமே நம்மை தரம் தாழ்த்தி விடும்.

மேலும் மாட்டும் மாமிசம் வைத்திருந்தவரை கொலை செய்ததை காரணம் காட்டி, தேசத்தில் சகிப்பு தன்மை இல்லாமல் போய்விட்டது என்று கூறி பல அறிஞர்களும், எழுத்தாளர்களும் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி அளித்து வருகிறார்கள். நாட்டுக்கு வழிகாட்ட வேண்டிய இவர்களே வழி தெரியாமல் இருக்கிறார்களே என்று சாமான்யர்களான நமக்கு வேதனை வருகிறது.   மத சகிப்பின்மைக்கு உச்சகட்ட உதாரணமாக சொல்லக்கூடிய பாபர் மசூதி இடிப்பு, மும்பை, டெல்லி, கோவை குண்டு வெடிப்புகள், பாராளுமன்றத்திற்குள் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், மும்பை ஹோட்டலில் பயங்கரவாதிகள் விடிய விடிய நடத்திய வெறியாட்டம் இப்படிப்பட்ட மகா கேடுகள் நடந்த போது தங்கள் விருதுகளை திருப்பி கொடுத்திருந்தார்கள் என்றால் அதில் நியாயம் இருக்கிறது. இவர்களது மனசாட்சியும் நமக்கு புரிந்திருக்கும். ஆனால் அப்போதெல்லாம் தங்களது கற்பனை வானில் சஞ்சாரம் செய்து கொண்டு, இப்போது தான் பூமிக்கு வந்தது போல இவர்கள் நடந்து கொள்ளுகின்ற முறை விந்தையாக இருக்கிறது.

ஒருவேளை இவர்கள் இடது சாரி சிந்தனைகளை பேசிப் பேசி தங்களை அறிவு ஜீவிகள் என்று பட்டம் சூட்டி நடந்து கொண்டது மக்கள் மத்தியில் பெருகி வரும் வலது சாரி சிந்தனைகளின் ஈர்ப்பால் கொள்ளை போய்விடுமோ என்ற அச்சத்தில் சொந்த கெளரவத்தை கட்டி காக்க போடுகின்ற கட்டிக்கார நாடகமாக கூட இருக்கலாமோ அல்லது நரேந்திர மோடி சிற் சில விமர்சன கருத்துக்களை உலவ விட்டாலும் நிரந்தரமான வளர்ச்சிப் பாதையில் நாட்டை அழைத்து செல்வது பிடிக்காத சில பழம் பெருச்சாளிகளின் தந்திர வேலையாக இருக்குமோ அல்லது இந்தியாவில் மத மோதல்கள் இருந்து கொண்டே இருக்கிறது எனவே சர்வதேச முதலீடுகள் இங்கே நடத்துவது எப்போதுமே அபாயம் என்பது உலக நாடுகள் நம்புவதற்கு நமது எதிரிநாடுகள் விரித்த சதி வலையாகவும் இருக்குமோ அல்லது விருதை திருப்பி கொடுத்த இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்து வந்த ஆதாயங்கள் எதாவது தடைபட்டு போயிருக்குமோ? அல்லது இவர்களும் அரசியல் கூத்து நடத்தும் அறிவு ஜீவி வேடதாரிகளோ? என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

காரணம் பிள்ளைகள் வீட்டில் தகராறு செய்யும் போது சமாதானம் செய்து வைப்பது தான் சரியான தகப்பனின் இலக்கணம். பிள்ளைகள் கூட இவனும் சேர்ந்து வானத்திற்கும், பூமிக்கும் குதித்தான் என்றால் அவன் பெயர் தகப்பன் அல்ல தறுதலை. புத்திசாலிகள் என்பவர்கள் நாட்டின் தகப்பன்கள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் இவர்களது எண்ணமும் செயலும் எப்போதும் முன்னேற்றத்தை பற்றியும் சமாதான சக வாழ்வை பற்றியும் இருக்க வேண்டும். நகரம் பற்றி எரிகின்ற போது, வயலின் வாசித்த ரோமாபுரி அரசன் போல் இருக்க கூடாது. ஆனால் அப்படிதான் இவர்கள் இருக்கிறார்கள் விருதுகளை திருப்பி கொடுத்ததனால் அடையக்கூடிய வெற்றி என்று எதுவுமே இல்லை. இந்தியா யுத்த பூமியாக இருக்கிறது என்று உலகத்திற்கு இவர்கள் திரும்ப திரும்ப கூக்குரலிட்டு சொன்னதாக இருக்குமே தவிர சமாதானத்தை கொண்டு வந்ததாக இருக்காது.

அதே நேரம் பசு என்ற உயிரை வதைக்க கூடாது என்று பேசுகிற ஜீவகாருன்ய பக்தர்கள் ஆடு, கோழி போன்றவைகளும் உயிரினங்கள் தான் அவைகளையும் வதைக்க கூடாது. கொல்லக்கூடாது யாரும் உண்ண கூடாது என்று தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துவார்களா? காரணம் பசு என்பது, கோமாதா. தெய்வீகம் சம்மந்தபட்டது என்று பக்தி ஆவேசத்தோடு பேசுகிற இவர்கள் காளை என்பது சிவபெருமானின் வாகனம். ஆடும், கோழியும் முருகரின் சின்னங்கள். மீனும், பன்றியும் பெருமாளின் அவதாரம். எனவே தெய்வீகமான எதுவும் இந்த நாட்டில் இரத்தம் சிந்தக்கூடாது என்பது நிஜமான சைவ விரும்பிகளின் விருப்பம். இந்த விருப்பத்தை இவர்கள் அரங்கேற்றம் செய்வார்களா? குறைந்த பட்சம் தங்கள் சொந்த வாழ்க்கையில் கடைபிடிப்பார்களா? என்பதை மனசாட்சி படி யோசிக்க வேண்டும்.


நான் பசுவை தெய்வம் என்று சொல்வதை எதிர்க்கவில்லை. பசுவின் தெய்வ தன்மை எல்லோரையும் விட எனக்கு சற்று அதிகமாகவே தெரியும் காரணம் நான் பசுஞ்சானம் மணக்கும் கிராமத்தில் பிறந்தவன். அங்கேயே வாழ்பவன். பசுவை பாதுகாக்க வேண்டும், குறிப்பாக நாட்டு பசுவை பாதுகாக்க வேண்டும் என்பது எனது எண்ணம். பல ஏழைகளுக்கு சொந்த தொழில் துவங்க நாட்டு பசுவை வாங்கி தானமாக கொடுத்து வருபவன். எனவே எனக்கு பசுவின் மீது அதிக அக்கறை உண்டு. ஆனால் அந்த பசுவை வைத்து வெறுப்புத்தனமான அரசியல் செய்வதோ, தேச நலத்திற்கு எதிராக செயல்படுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும். முஸ்லிம்களை வெல்ல வேண்டுமென்றால், அவர்களுக்குள் இருக்கின்ற பல நல்ல அம்சங்களை நீங்கள் கடைபிடியுங்கள். அவர்கள் முன்னேற கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உங்களால் ஆனதை அவர்களுக்கு செய்யுங்கள். அன்பால், பாசத்தால், அரவணைப்பால், முஸ்லிம்களை கண்டிப்பாக வெல்லலாம். அது தான் நாட்டுக்கு நீங்கள் செய்யும் தொண்டாக இருக்கும்.






Contact Form

Name

Email *

Message *