Store
  Store
  Store
  Store
  Store
  Store

பூடானும் நமக்கு சண்டைக்காரனா...? 


    ண்பதுகளில் நினைவுகள் உங்களுக்கு இருந்தால் ஜனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் லாட்டரி சீட்டு வாங்குங்க என்ற குரலை கேட்காமல் இருந்திருக்க முடியாது. நம்மில் பலபேருக்கு லாட்டரி சீட்டை வைத்தே மிசோராம், மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பெயர்கள் தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு அந்த பகுதி நாட்டில் மற்ற பகுதிகளிருந்து விலகி இருந்தது என்று தான் கூறவேண்டும் இவற்றில் முக்கியமாக பூடான் என்ற வார்ததையை அடிக்கடி கேட்டிருப்போம் அதில் குறிப்பாக ராயல் பூடான் என்ற வார்த்தையை மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு அந்த லாட்டரி புகழ் பெற்றதாகும். 


பூடான் என்றவுடன் நாகலாந்து, சிக்கீம், மணிப்பூர் போல இதுவும் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் நம்மில் பலர் இன்றும் நினைத்திருக்கிறார்கள் ஆனால் பூடான் இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல அது தனியான சுதந்திரமான ஒரு தேசமாகும். அதற்கென்று தனிச்சட்டம் இருக்கிறது தனி கொடி இருக்கிறது தனி தேசிய கீதம் கூட இருக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நாட்டிற்கு ஒரு மன்னரும் பிரதம மந்திரியும் இருக்கிறார்கள் 


வரலாற்றில் காமரூபம் என்ற தேசத்தை பற்றி பலர் படித்திருப்பார்கள் அந்த தேசத்தின் இன்றைய ரூபம் தான் பூடான் என்று சொல்லப்படுகிறது பூடான் திபெத் நாட்டிற்கு அருகில் இமயமலையின் அடிவாரத்தில் பரந்த நிலப்பகுதியில் இருக்கும் ஒரு அழகிய தேசமாகும். உலகிலேயே மிக மகிழ்ச்சிகரமாக வாழக்கூடிய மக்கள் இந்த நாட்டில் தான் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகிறது. 


அப்படிப்பட்ட தேசத்தில் தற்போதைய மன்னரின் பெயர் ஜிக்மே கேசர் நாம்கியல் பாக்ஸுக் என்பதாகும் இவர் மிகவும் இளைய வயது உடைய மன்னர். எண்பத்தி ஆறாம் வருடத்தில் தான் பிறந்திருக்கிறார் இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டு மன்னராக முடிசூட்ட பட்டிருக்கிறார் இவர் வாங்க்ஸுக் மரபை சேர்ந்தவர் ஆவார் இவருடைய வம்சம் தான் ஆயிரம் வருடகாலமாக பூடானை ஆண்டுவருகிறது. பூடான் ஒரு அதிசயமான தேசமாகும். உலகில் எந்த நாட்டிற்கும் அடிமைபடாமல் தொன்றுதொட்டு சுதந்திரமாகவே இருந்துவரும் சில தேசங்களில் ஒன்றாக பூடான் இருக்கிறது 


இதனுடைய இராணுவம் நாணயம் வெளிவிவகார துறை போன்ற முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்தியா செய்து வருகிறது. ஒருவகையில் பூடான் தனிநாடு தான் என்றாலும் கூட அந்த மக்களும் இந்தியாவில் வடகிழக்கு பிராந்திய மக்களும் தங்களை ஒருபோதும் அந்நியர்களாக வேற்று நாட்டவர்களாக கருதுவது கிடையாது. அவர்கள் மத்தியில் கொள்வினை கொடுப்பினை கூட தங்கு தடடையில்லாமல் நடந்து வருகிறது. 


எல்லாம் சரி சம்மந்தமே இல்லாமல் பூடானை பற்றி இப்போது நான் எதற்கு பேசுகிறேன் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? காரணம் இல்லாமல் இல்லை விஷயம் இருக்கிறது. இந்தியர்களான நம்மை ஒருபக்கம் சீனாக்காரன் நெருக்குகிறான் மிரட்டுகிறான் இன்னொருபக்கம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கிறான். குட்டி நாடான நேபாளம் கூட ஒருவகையில் தொல்லை தருகிறது இப்படி கொதிப்பான நிலை இருந்துவரும் போது பூடானும் மற்ற நாடுகளை போல இந்தியாவின் மீது பகைமை பாராட்ட துவங்கி விட்டது நமக்கு குறிப்பாக அசாம் மாநிலத்திற்கு இதுவரை தந்து கொண்டிருந்த தண்ணீரை தரமருத்து விட்டது வாய்க்காலை அடைத்து விட்டது என்று செய்தி சமூக ஊடகங்களால் காரசாரமாக விவாதிக்கபட்டது 


இந்த விவாதத்தின் உள்பொருளாக ஒரு முக்கிய விஷயம் இருந்தது நரேந்திர மோடியின் மத்திய அரசு ராஜ தந்திர ரீதியில் முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. மிகச்சிறிய நாடுகள் எல்லாம் நம்மை பார்த்து மரியாதையாக அடங்கி கிடந்த காலம் போய் நம் மீதே ஏறி மிதிக்கும் காலம் வந்துவிட்டது இது மிகவும் இந்தியாவிற்கு அவமானகரமான நிகழ்வாகும். என்று பேசப்பட்டது 


இந்த விஷயத்தில் ஊடகங்கள் கூறுவது எத்தனை சதவிகிதம் உண்மை? நிஜமாகவே பூடான் பகைமை பாராட்ட துவங்கி விட்டதா? என்று ஆராய்ந்த போது திடுக்கிடும் சில உண்மைகள் தெரியவந்து மனதிற்கு பெரிய வேதனையை கொடுத்தது பூடான் நாட்டிலிருந்து அசாம் மாநிலத்திற்கு செயற்கையாக வெட்டப்பட்ட கால்வாய் ஒன்று எழுபது வருட காலமாக இருந்து வருகிறது. அசாம் மாநிலம் முழுவதும் நல்ல மழை என்றாலும் கூட இந்த கால்வாய் உள்ள பகுதியில் சிறிது வறட்சியாகவே எப்போதும் இருக்கும். ஆனால் அந்த கால்வாய் வருகிற தண்ணீர் தான் அந்த பகுதி மக்களில் விவசாயத்திற்கும் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வாக இருந்து வருகிறது. 


இப்போது அங்கு மழைக்காலம் நல்ல மழைவருகிறது அந்த மழைவெள்ளத்தில் சில பாறைகள் உருண்டுவிழுந்து வாய்க்காலுக்குள் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டது. இதனால் அசாமிற்கு வழக்கமாக வந்துசேர வேண்டிய நீர் வரவில்லை இது தான் அங்கே நடந்ததாகும். சில நாட்களிலேயே இந்த குறை சரி செய்யப்பட்டு விட்டது 


இப்படி இயற்க்கையாக நடந்த ஒரு நிகழ்வை பெரிதுபடுத்தி மோடி அரசை குறை சொல்ல வேண்டும் அதில் அரசியல் ஆதாயம் வரவேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே மையமாக வைத்து சில அறிவுஜீவி கூட்டங்கள் வேண்டுமென்றே திரிபு வாதங்களை நாடெங்கும் பரவவிட்டு கொண்டிருக்கிறார்கள். திரு மோடி அவர்கள் மீது யாரும் குறைகாண கூடாது என்று சொல்லவில்லை அவர் மீது ஆயிரம் அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். எனக்கே கூட அவருடைய சில செயல்களில் விமர்சன கருத்துக்கள் உண்டு குறிப்பாக தற்காலிக விஷயம் ஒன்றை சொல்லுவதாக இருந்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மையில்கள் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதை சொல்லலாம். ஒரு நல்ல மத்திய அரசு மக்களின் மீது அக்கறை உள்ளை மத்திய அரசு அவர்களை இந்த வகையில் கொடுமைப்படுத்தி இருக்க கூடாது என்பது என் எண்ணம். அதற்காக மோடி செய்வது எல்லாமே குற்றங்கள் தான் என்று எப்படி கூறமுடியும். 


இங்கே மோடி பெரிதல்ல தேசம் பெரியது இந்த தேசத்தில் வலிமையையும் பாதுகாப்பும் கெளவரமும் பெரியதாகும். மோடியை குறைகூற வேண்டும் என்பதற்காக தேசத்தை காட்டி கொடுக்க கூடாது. இல்லாத ஒன்றை நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி மக்கள் மனதை திசை திருப்ப கூடாது. அது பெரிய பாவம் 


இன்னொரு விஷயமும் இங்கே நடைபெறுகிறது ஈரான் நாட்டோடு இந்தியா செய்து கொண்ட ரயில் ரோடு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் முடித்து விட்டது இனி நீங்கள் இங்கே வேலை செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டது இது மோடி அரசின் பெரிய தோல்வி என்று பூதாகாரம் படுத்த படுகிறது ஆனால் எதார்த்தம் வேறு ஈரானோடு செய்திருக்கும் அந்த ஒப்பந்தம் பத்தாண்டு கால ஆயுள் கொண்டது இது வரையிலும் ஐந்து வருடம் தான் ஒப்பந்தப்படி முடிந்திருக்கிறது. அதை விரைவில் செய்து தரும்படி ஈரான் அரசு நெருக்கடி கொடுக்கிறது அதற்கு நிஜமான காரணம் சீனாவின் உள்ளடி வேலையாகும். இதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் சில விமர்சனங்களை பரப்புவது தேசநலன்களுக்கு உகந்தது அல்ல.


மோடி தவறு செய்கிறாரா? அவர் செய்கை நமக்கு பிடிக்கவில்லையா? தேர்தல் என்று ஒன்று வருமே அப்போது அவரை நாம் சரியானபடி கவனித்து கொள்ளலாம். அது நமது உள்வீட்டு விஷயம். இப்போது நம்மை சுற்றி நடந்து கொண்டிருப்பது கபடி விளையாட்டு அல்ல கபட நிகழ்வுகள் ஆகும். நமது ஒற்றுமையை எதிரிகளுக்கு காட்டி அச்சுறுத்த வேண்டும் அதை விட்டு விட்டு நம் காலை நாமே வாரிவிட்டு கொண்டால் சரித்திரம் நம்மை பார்த்து சிரிக்கும் வருங்கால தலைமுறை நம்மை ஏளனம் செய்யும்.

குருஜி



Contact Form

Name

Email *

Message *