Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜி கடிதம் !




ன்புள்ள உஜிலாதேவி இணையத்தளம் மற்றும் முகநூல் வாசகர்கள் அனைவருக்கும் இறைவன் நாராயணனின் திருவருளை முன்னிட்டு வாழ்த்துதலோடு குருஜி ஆகிய நான் எழுதும் கடிதம். 


நீங்கள் அனைவரும் வளமோடும் நலமோடும் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை சந்தித்து உங்களோடு உரையாடி வருடங்கள் பல கடந்துவிட்டன. அதிகப்படியான வேலை நேர இன்மை என்று சாக்குபோக்கு கூற நான் விரும்பவில்லை காரணம் எனது உடல் நிலையில் மிகவும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் ஒருநாள் அல்ல இரண்டு நாள் அல்ல ஒன்பது மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவியில் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்தில் தான் இருந்தேன் எனது நுரையீரல் செயல் இழந்து விட்டது இனி அது இயங்காது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். என்னை நெருக்கமாக தெரிந்த அனைவருமே குருஜி திரும் பவருவது இயலாத காரியம் என்று துயரத்தில் ஆழ்ந்து விட்டார்கள். 


மருத்துவ கருவிகளின் மூலம் ஆய்வுகள் செய்ததில் எனது ஒற்றை நுரையீரல் மட்டும் மிக சிறியதாக இருப்பதாகவும் அதனால் தான் இந்த பாதிப்பு என்றும் மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஏறக்குறைய ஐந்து மாதங்கள் நான் சுயநினைவில் இல்லை என்று தான் கூறவேண்டும் 


ஒருநாள் இரவில் திடிரென்று எனக்கு நினைவு திரும்பி எனது வழக்கமான முறையில் படுத்திருந்தே ஸ்ரீ ராம நாமத்தை ஜெபம் செய்ய துவங்கி விட்டேன் என்னை சுற்றி நடப்பது எல்லாம் எனக்கு தெரிய ஆரம்பித்தது மருத்துவர்கள் நம்பிக்கையே இல்லாமல் சிகிச்சை அளித்தார்கள் எனது தொண்டையில் ட்ராகஷ்மி செய்திருந்ததனால் என்னால் பேச இயலவில்லை ஆனால் மருத்துவர்களிடம் நான் சாகமாட்டேன் நம்பிக்கையோடு சிகிச்சை செய்யுங்கள் என்று சைகை செய்தேன் 


ஒன்பது மாதங்கள் படுத்த படுக்கையில் புரண்டு கூட படுக்கமுடியாமல் அப்படியே இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் அறிந்தாலும் அந்த ஓய்வு நான் தியானம் செய்வதற்காக எனக்கு கிடைத்த சந்தர்ப்பமாகவே கருதினேன். நீங்கள் இவ்வளவு கஷ்டம் அனுபவிக்க வேண்டுமா? உங்கள் சக்தியை பயன்படுத்தி படுக்கையிலிருந்து எழுந்து வரக்கூடாதா? என்று எல்லா அன்பர்களும் மாறி மாறி கேட்டார்கள் 


நான் அவர்களுக்கு அப்போது எந்த பதிலும் கூறவில்லை நோய் என்பது நாம் செய்த தவறுகளுக்காக மட்டும் வருவதில்லை கடந்த காலத்து ஜென்மாந்திர கர்மாவை முற்றிலுமாக நிவர்த்தி செய்து அடுத்து பிறவியே இல்லாத நிலையை நோக்கி மனித ஆத்மா செல்வதற்காக வருகிறது என்பதையோ அதை பூரணமாக அனுபவித்து முடிப்பதில் தான் நிஜமான சாதனை இருக்கிறது என்பதையோ அப்போது நான் யாரிடமும் கூறவில்லை 


இன்று கூட இரண்டு வருடம் முடிய போகிறது தொண்டையில் செய்த ட்ராகஷ்மி இன்னும் முழுமையாக அடைபடவில்லை அதனால் என்னால் முன்பே போல சரளமாக பேசமுடியவில்லை என்ற நிலை தான் இருக்கிறது இவற்றிலிருந்து இறைவன் அருளால் தமது தவ சக்தியால் விரைவில் வெளிவந்து விடலாம் ஆனால் அப்படி வெளிவந்தால் இந்த கர்மாவை இந்த பிறவியோடு முடிக்காமல் அடுத்த பிறவிக்கும் எடுத்து போகவேண்டிய துர்பாக்கிய நிலை வந்துவிடும். அதனால் நடப்பது எல்லாம் நாராயணன் செயல் எல்லா வற்றையும் ஸ்ரீ ராமன் பார்த்து கொள்வான் கிருஷ்ணன் என்னோடு துணையிருப்பான் என்று காத்திருக்கிறேன். 


இத்தனை இடர்பாடுகள் இருந்தாலும் எனது கடமையை நான் செய்து வருவதாகவே நினைக்கிறேன் என் குரு தேவர் நான் கற்ற மந்திரங்களை மற்றவர்களுக்கு கற்பிக்க சொன்னார் எனது ஆன்மீக அனுபவங்களையும் மறைந்து போன பல ஞான பொக்கிஷங்களையும் எழுத்து வடிவமாக கொடுக்க சொன்னார் அவைகளை தங்கு தடையில்லாமல் நிறைவேற்றி வருகிறேன். மருத்துவமனையில் இருந்த ஒருவருடம் தவிர இப்போது ஆசிரமத்திலிருக்கும் இந்த நேரத்திலும் அதை தொடர்கிறேன். படிக்கிறேன் எழுதுகிறேன் மிக நீண்ட நேரம் ராம நாம ஜெபத்தில் ஈடுபடுகிறேன் இதை தவிர வாழ்க்கையில் வேறு என்ன இன்பம் இருக்க இயலும்? 


பொதுவாக எனக்கு உச்சாகத்தை தருவது என்னவென்றால் நான் எழுதுகிற கருத்துக்கு நல்லவிதமாகவோ எதிர்விதமாகவோ விமர்சனங்கள் வருகிற போது மனது புத்தாடை அணிவது போல ஒரு உற்சாகத்தில் திளைக்க துவங்கி விடும். அதுவும் குறிப்பாக நான் அதிகம் விரும்புகிற மனிதன் நம்மை விமர்சிக்கிறார்கள் என்றால் பச்சை மிளகாய் கடித்து பழையசாதம் சாப்பிடுவது போல அலாதியான கிறுகிறுப்பு மனதிற்கு வந்துவிடுகிறது. 


எனக்கு நிறைய அன்பான வாசகர்கள் உண்டு அதில் டாக்டர் அன்புராஜ் குறிப்பிட தக்கவர் அவருடைய கருத்துக்களோ அல்லது மனோபாவமோ அல்லது அவர் எனது பூர்வீக மண்ணை சார்ந்தவர் என்பதாலோ அவர் மீது மட்டும் தனியான அன்பு எனக்கு உண்டு பல நேரங்களில் அவர் எனது எழுத்துக்கு தருகிற மிக விரிவான விமர்சனங்களை கண்டு நானே வியந்து போயிருக்கிறேன். 


அந்த வகையில் நான் நேற்று எழுதிய இயேசுவை அவமதிக்கும் பாதிரிகள் ! என்ற உரையாடல் கட்டுரைக்கு அன்புராஜ் அவர்கள் எழுதியிருந்த விமர்சனம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதில் அவர் என்னை ஒருவரியில் சரியான வாத்துமடையன் என்று சொல்கிறார் அந்த வார்த்தையை கேட்டவுடன் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. காரணம் இதே வார்த்தையை பயன்படுத்தி தான் நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தை என்னை அழைப்பார் அன்புராஜ் அதே வார்த்தையை சொன்னபோது நிச்சயமாக நான் நெகிழ்ச்சி அடைந்து விட்டேன். 


நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ ஒருவகையில் நான் வாத்துமடையன் தான் இந்த வாத்து மடையன் என்ற வார்த்தை எப்படி உதயமானது என்று சிலருக்கு தெரியும் யாரும் காக்கா மடையன் மைனா மடையன் கொக்கு மடையன் என்று யாரையும் அழைப்பது இல்லை. வாத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. 


அதற்கு காரணம் ஆதிகாலத்திலிருந்து இப்போது அழிந்து போய்விட்ட அன்னப்பறவையும் இன்றைய வாத்தும் ஏறக்குறைய பார்ப்பதற்கு ஒன்றை போலவே இருக்கும். அன்னத்தின் சிறப்பு அம்மசம் என்னவென்றால் பாலையும் தண்ணீரையும் சேர்த்து வைத்தாலும் இரண்டையும் தனித்தனியாக பிரித்து எடுத்துவிடும். நமது வாத்துக்களை கூட உன்னிப்பாக கவனித்து பாருங்கள் எவ்வளவு அடர்த்தியான சேற்றுக்குள் பூச்சு புழுவும் மறைந்திருந்தாலும் எப்படியாவது தோண்டி துழாவி வெளியே எடுத்துவிடும். 


நானும் அப்படி தான் ஒரு விஷயத்தை வெளியே கொண்டுவர வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் அதை செய்யாமல் என்னால் ஓய்வு கொள்ள இயலாது. அவ்வளவு பிடிவாதம் எனக்கு உண்டு அந்த வகையில் நானும் வாத்தும் ஒரே இனம் தான் இன்னொரு விஷயம் இருக்கிறது வாத்தை சுட வேண்டுமென்றால் குறிபார்த்து அது உடம்பில் சுட வேண்டிய அவசியமில்லை பக்கத்தில் எங்காவது சுட்டால் கூட போதும். தன்னை தான் சுட்டுவிட்டார்கள் என்று இது செத்து போகுமாம். 


எனக்கும் அந்த இயல்பு இருக்கிறது என் பக்கத்தில் இருப்பவர்கள் யாருக்காவது ஒரு கஷ்டம் வந்தால் அது எனக்கே வந்தது போல் நினைத்து நான் சோர்ந்து விடுகிறேன் உணர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறேன். இப்போது கூட பாருங்கள் சுவீடன் நாட்டில் ஒரு கும்பல் அரசியல் காரணத்திற்க்காக குரான் புத்தகத்தை நெருப்பு வைத்து கொளுத்தினார்களாம். 


அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. குரான் என்பது முஸ்லிம்களின் சொத்து தானே அதற்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என்று பலர் நினைக்கலாம். ஆனால் எனக்கொரு மகன் இருக்கிறான் அவன் மீது நான் அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறேன் அவன் ஒருநாள் இறந்து விடுகிறான். என்றால் புத்திர சோகத்தால் நான் எவ்வளவு பாடுபடுவேனோ அதே துன்பத்தை தானே பக்கத்து வீட்டுகாரன் தன் பிள்ளையை பலிகொடுத்தாலும் அனுபவிப்பான். அதை உணராத இதயம் என்ன இதயம் அந்த வகையில் நான் வாத்து மடையன் என்பதில் சந்தேகமே இல்லை. இன்னும் சொல்ல போனால் இன்னும் அதிகமான அளவில் வாத்து மடையனாக நான் வளர்ச்சி காணவே விரும்புகிறேன். 


இன்னொரு விஷயத்தை மனமிட்டு இங்கு பேசுவதற்கு விரும்புகிறேன் என்னை பார்ப்பதற்கு என்னோடு நேரில் பேசுவதற்கு நிறைய பேர் விரும்புகிறார்கள் அவர்களில் பலரை நான் பார்ப்பதற்கு விரும்புவது கிடையாது. காரணம் அவர்களின் எண்ணமும் எனது எண்ணமும் வேறு வேறானது. எண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒட்டி கொள்ளாதோ அப்படியே நானும் அவர்களும் இருக்கிறோம் 


ஆனால் டாக்டர் அன்புராஜ் அவர்களை நான் நேரில் பார்ப்பதற்கு அவரோடு உரையாடுவதற்கு மிகவும் விரும்புகிறேன் இந்த ஊரடங்கு காலம் முடிந்த பிறகு ஒருநாள் அவர் நமது ஆசிரமத்திற்கு வந்தால் எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கும் இந்த உலகிலேயே மிகவும் ஆனந்தமான நேரம் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களோடு இருக்கும் நேரம் தான். நான் அன்புராஜ் அவர்களின் வருகையை அப்படி தான் நினைக்கிறன்.


இன்னொரு விஷயத்தையும் இங்கே அவரிடம் கூற நான் விரும்புகிறேன் நீங்கள் விரும்புகிறபடி எழுதலாம் நினைக்கிறேன் ஆனால் அது என்னால் முடிவதில்லை அதற்காக வருந்துகிறேன். இதை அன்புராஜ்க்காக மட்டும் நான் சொல்லவில்லை அவரை போலவே நிறையபேர் கருத்துக்களை கூறுகிறார்கள் அதையும் என்னிடம் ஆசிரமத்தில் காட்டுகிறார்கள் நானும் படிக்கிறேன் எனவே அவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் இந்த பதிலை வைக்கிறேன் 


எல்லோருக்கும் எனது ஆசீர்வாதங்கள் நாராயணன் நல்லதே செய்யட்டும். 

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 

குருஜி





Contact Form

Name

Email *

Message *