Store
  Store
  Store
  Store
  Store
  Store

இஸ்லாமியர் தீவிரவாதியா...?



ல்யாண சத்தடியில் தாலிகட்ட மறந்த கதை என்ற அழகான பழமொழி ஒன்று நமது தமிழ் நாட்டில் உண்டு அதற்கு கொஞ்சம் கூட சளைக்காத சம்பவம் ஒன்று தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே நடந்து வருகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமியால் ஒருபக்கம் சோதனையும் கண்ணுக்கு தெரிந்த வைரசான சீனாவால் இன்னொருபக்கம் வேதனையும் உள்நாட்டிற்குள் ஆங்காங்கே நடைபெறுகின்ற சிற்சில அசம்பாவிதங்களும் நமது கண்ணில் இருந்து அந்த முக்கியமான விஷயத்தை மறைத்து விட்டது என்று நினைக்கிறன். 


சமீபத்தில் ஐக்கிய நாட்டு சபையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அமைப்பு இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறது. இதுவரை சிரியா, ஈராக் போன்ற அரபு நாடுகளில் நாசவேலைகளை செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தென்னிந்தியா முழுவதும் வன்முறைகள் படுகொலைகள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.என்பதே அந்த செய்தி. 


பயங்கரவாதம் என்பது மனித சமூதாயத்தை பீடித்திருக்கும் மிக கொடூரமான புற்றுநோய் போன்றது. சமூகத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய சில மனிதர்கள் மட்டுமே பயங்கரவாதிகளாக இருந்தாலும் அவர்களது செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் காட்டு தீயை போல பரவி அழித்துவிடும். 


இதுவரை நமது உலகில் இயற்க்கை அபாயங்களை விட தொற்றுநோய் பேரழிவுகளை விட பயங்கரவாதம் அதிகமான உயிர்களை பலிகொண்டு இருக்கிறது. பொதுவாக பயங்கரவாதத்தை இரண்டாக பிரிக்கலாம் ஒன்று அரசு சார்ந்த பயங்கர வாதம் இரண்டு தனி நபர்களின் தத்துவங்களால் உருவாகும் பயங்கர வாதம். இதுவரை சரித்திரத்தில் ஏடுகளை புரட்டி பார்த்தால் அரசாங்கங்கள் உருவாக்கிய பயங்கர வாதத்தின் எதிர்வினையாகவே தனிநபர் பயங்கர வாதம் தோன்றி இருக்கிறது எனலாம். 


மிகப்பழைய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பயங்கர வாத தாக்குதல்களை நெறிப்படுத்தி கட்டமைக்கப்பட்ட தாக்குதல்களாக உருவாக்கியதில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இங்கிலாந்தும் முதல் பங்குபணி செய்தார்கள் என்று துணிந்து கூறலாம். 


அரபு நாடுகளில் மிக அபரிதமான கொட்டி கிடக்கும் எண்ணெய் வளங்களை சுரண்டடி பிழைக்க இந்த நாடுகள் விரும்பின அதன் காரணமாக அரபு மக்களிடம் இயல்பாகவே அமைந்திருந்த முரட்டு சுபாவத்தை பயன்படுத்தி இனவழியாக பிரிவினைகளை ஏற்படுத்தி சண்டைகளை துவக்கினார்கள். அவர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்கிறேன் என்று ஆயுதங்களை விற்பதும் இயற்கை வளங்களை சுரண்டுவதுமாக தங்களது செல்வாதாரத்தை வளர்த்தார்கள். இன்னும் அதி வேகமாக சண்டைகள் வளர்வதற்கு இனத்தை விட மதத்தை பயன்படுத்தினால் அதிக லாபம் அடையாளமென்று கருதி அரபு இளைஞர்களுக்கு அடிப்படைவாத இஸ்லாமிய கருத்துக்களை ஊட்டி அவர்களை பயங்கரவாதிகளாக உருமாற்றினார்கள் 


இன்று மிக கொடூரமான பயங்கரவாத அமைப்பாக இருக்கும் தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்களின் உருவாக்கத்திற்கு அமெரிக்காவே அடிப்படை காரணம் என்று சொல்லலாம் அரபு நாடுகளை எந்த அளவு கொள்ளையடிக்க வேண்டுமோ அந்தளவு கொள்ளையடித்து விட்டு இப்போது அரபு நாடுகளையும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளையும் ஏறக்குறைய இந்த நாடுகள் கைகழுவிவிட்டது என்று கூறலாம். 


இரும்புப்பிடித்தவன் கையும் சிரங்குபிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள். இது தான் பயங்கரவாதிகளின் உண்மையான மனோநிலை அவர்கள் தங்கள் மதத்தின் விடுதலைக்காக போராடுகிறேன் என்பதெல்லாம் வெறும் மாய்மால பேச்சாகும். அவர்களுடைய விருப்பம் யாரைவது கொலை செய்து கொண்டு இருக்க வேண்டும் இரத்தத்தை ரசித்து பார்க்க வேண்டும் என்பது தானே தவிர மதம் என்பதெல்லாம் வெறும் சாக்கு. 


இன்னொரு விஷயத்தை இங்கு கவனிக்க வேண்டும் தீவிரவாதம் பயங்கரவாதம் என்றவுடன் அவர்கள் நிச்சயம் முஸ்லீம்களாக தான் இருப்பார்கள் என்ற மாயை உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இது அப்பட்டமான இனவாதமாகும். ஒரு மதத்தில் சிலர் கொலைகாரர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்காக அந்த மதமே அப்படி தான் என்று கூறுவதை ஏற்புடையதாக கொள்ள இயலாது. 


உதாரணமாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்லாத்துக்காக ஜிகாத் அதாவது புனித போர் செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு உலகத்தில் உள்ள மற்ற மதத்தினர் கொடுக்கும் வியாக்கியானம் என்னவென்றால் இஸ்லாத்தை தவிர மற்ற மார்க்கங்களில் இருப்பவர்கள் அனைவரும் காபிர்கள் அவர்களை கொன்றொழிப்பதே ஜிகாத் என்பதாகும் என்கிறார்கள். 


உண்மையில் புனித குரானின் வாசகத்தின் படி ஜிகாத் என்பது என்னவென்று உணர வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அதாவது நாத்தீகனே காபீர் என்று அழைக்கப்படுவான் அவனை திருத்துவதற்காக அல்லது அல்லாவின் வழியில் நடத்துவதற்காக செய்யப்படும் முயற்சியே ஜிகாத் எனப்படும். ஆனால் என்னவோ தெரியவில்லை அல்லாவின் வார்த்தையான இந்த ஜிகாத் என்ற சொல் அன்றுமுதல் இன்றுவரை தவறுதலாகவே பொருள்கொள்ள பட்டு வருகிறது. பகவான் சொன்ன பகவத் கீதையை சரியாக புரிந்துகொள்ளாமல் அது கொலைகார நூல் என்று சொல்பவர்கள் இருக்கும் போது ஜிகாத் என்ற சொல்லுக்கு அனர்தன வியாக்கியானம் இருப்பது ஒன்றும் புதிதல்ல. 


இஸ்லாத்தில் பயங்கரவாதம் இல்லை அதே நேரம் பயங்கரவாதிகளில் பலர் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். இதை மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. ஆனால் அந்த இனத்தில் மட்டும் இத்தனை பயங்கர வாதிகள் உருவாவதற்கு மிக முக்கிய காரணம் சர்வதேச அரசியல் சூழ்ச்சி மட்டும் இல்லை அந்த மக்களிடம் கல்வி வளர்ச்சி என்பது அதிகமாக இல்லாது இருப்பதே நிஜமான காரணமாகும். பொதுவாகவே அறிவில் தெளிவும் தொழிலும் இல்லாதவர்கள் சற்று மூர்க்கமாகவே இருப்பார்கள் என்பது நாம் அறியாதது அல்ல. 


இங்கே நாம் பயங்கரவாதத்தின் தோற்றமும் வளர்ச்சி பற்றி சிந்திக்க வரவில்லை இந்திய தேசத்திற்குள் ஊடுருவி இருக்கும் மிக மோசமான பயங்கரவாதிகளால் ஏற்பட போகும் அசம்பாவிதங்கள் பற்றியே ஆகும். சென்ற வருடத்தில் இலங்கையில் சில கிருஸ்தவ தேவாலயங்களில் மனித வெடிகுண்டுகள் தாக்கி முந்நூறுக்கு மேற்பட்ட அப்பாவி மனிதர்கள் அநியாயமான முறையில் மாண்டு போனார்கள். அதே போன்ற வேறொரு தாக்குதல் உலகத்தில் எந்த மூலையிலும் இனி ஏற்பட கூடாது. 


இலங்கையில் குண்டுவைப்பதற்கு காரணமாக இருந்த சில நபர்கள் தமிழ்நாட்டில் கோவையில் கண்டுபிடிக்க பட்டு கைதானார்கள் அதே போல கன்னியாகுமரியில் களியக்காவிளை என்ற பகுதியில் காவல்துறை ஆய்வாளர் வின்சன்ட் என்பவர் சில தீவிர வாதிகளை கைது செய்ய முற்படும் போது அவர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த தீவிரவாதிகளில் சிலரை கர்நாடக மாநிலத்தில் கைது செய்தார்கள். இந்த சம்பவங்கள் நமக்கு எதை காட்டுகிறது என்றால் தென்னிந்தியா முழுவதும் பயங்கரவாதிகள் கண்ணுக்கு தெரியாத ஒரு வலையை பின்னி சர்வ சுகந்திரமாக செயல்படுகிறார்கள் என்பது நன்றாக தெரிய வருகிறது. 


நமது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பயங்கரவாதத்தில் முதல் முகத்தை ஸ்ரீபெரம்பத்தூரில் நாம் நேருக்கு நேராக பார்த்தோம். நமது பிரதமர் ராஜிவ்காந்தி விடுதலை புலி அமைப்பை சேர்ந்த தாணு, சிவராசன் ஆகிய கும்பலால் படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த தேசமே அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டது. 


திரு ராஜிவ்காந்தி படுகொலைக்கு பிறகு தமிழ்நாட்டில் பதவிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் இரும்புக்கரம் கொண்டு விடுதலைபுலி அமைப்புகளை அடக்கி ஒடுக்கினார் அப்போது அடங்கி போன பயங்கரவாத விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் மீண்டும் தலையெடுக்கவே இல்லை. 


அதே போன்றே கோவையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலை அல்லுமா அமைப்பினர் நடத்தி ஐம்பதுக்கும் அதிகமான பொதுமக்களை கொலை செய்தார்கள். அப்போது அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டார்கள் தவிர பிறகு அவர்கள் மீது சிறுபான்மையினர் என்ற பட்டத்தை சுமத்தி தமிழக அரசு மென்மையான போக்கை அவர்கள் மேல் கையாண்டது. 


விடுதலைபுலி அமைப்பின் மீது எப்படி தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டதோ அதே போன்று அல்லுமா மீதும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று தென்னிந்தியாவிற்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வருவதற்கு யோசித்து இருப்பார்கள். அன்று ஜெயலலிதா எப்படி விழிப்புடன் செயல்பட்டாரோ அதே விழிப்போடு இன்று கேரள கர்நாடக அரசுகள் செயல்பட்டால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இங்கு ஒன்றும் செய்ய இயலாது. 


ஐநா சபை கேரளாவுக்கும் கர்நாடகத்திற்கும் தானே எச்சரிக்கை அறிவிப்பு உள்ளது தமிழ் நாட்டிற்கு இல்லையே என்று அசட்டை போக்கில் நமது அரசு இருந்துவிட கூடாது. நமது உளவு அமைப்பும் நம் காவல்படையும் மிகவும் திறமை வாய்ந்தவைகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களுக்கு தீவிரவாதிகளின் மீது ஈவு இரக்கம் காட்டவேண்டியது இல்லை சுதந்திரமாக செயல்படுங்கள் என்று உத்தரவு கொடுத்தால் போதுமானது. 


பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளை எப்படி கே.பி.எஸ்.கில் என்ற காவல் துறை தலைவர் வேட்டை ஆடினாரோ அதே போன்று இப்போது செய்தால் எல்லாம் சரியாகிவிடும். நமது மத்திய மாநில அரசுகளும் மற்ற அரசியல் கட்சிகளும் ஒன்றை சரியாக புரிந்துகொள்ளவேண்டும். 


எந்த இஸ்லாமியனும் பயங்கரவாதத்தை வரவேற்க மாட்டான். புனித குரானை தினமும் ஓதுகிற முஸ்லீம் அயல்நாட்டு விவகாரங்களில் தேவையில்லமல் தலையிட கூடாது என்ற அல்லாவின் வார்த்தையை மறக்க மாட்டான் பயங்கர வாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லையென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். சாந்தியும் சமாதானமும் நிகழவேண்டும் என்பதே ஒவ்வொரு முஸல்மான்களின் உண்மையான பிரார்த்தனையாகும். இதை அரசுகளும் மற்ற இயக்கங்களும் புரிந்து கொள்ள வேண்டும். 



குருஜி



Contact Form

Name

Email *

Message *