உதிரமும் சதையுமாய் ஆனவன்
மரத்தடி கட்டிலில் கிடக்கும்
வாலிபம் தவறிய கிழவன்
கரமும் சிரமும் நடுங்க
இருண்டு போன கண்ணில்
இனிய மகனையே நினைப்பான்
வரமாய் மகனிடம் கேட்பது
வாஞ்சை அழைப்பை அன்றோ
குப்பியில் இல்லாத தைலம்
குப்புற கவிழ்வது போல
அப்பன் இல்லாத குடும்பம்
அடித்தளம் இன்றி சரியும்
தப்பு செய்தால் திருத்த
தலைவன் வேண்டும் அன்றோ
ஒப்புக் கொள்ள மறுத்தால்
உலகம் உன்னை சபிக்கும்
சட்டை வேட்டி மோதிரம்
தருவது அப்பன் அன்றோ
கெட்டிக் காரன் பட்டம்
கிடைப்பதும் அவனால் அன்றோ
பட்டு மெத்தை பதவி
பகட்டும் தருவது அப்பன்
கெட்டுப் போனால் உடனே
கட்டிப் பிடிப்பவன் அப்பன்
தேரும் திருவிழா பார்க்க
தோள்களில் உன்னை சுமப்பான்
ஊறும் நோய்தனை விரட்ட
விழித்து இருந்து காப்பான்
பாரும் மக்களும் போற்ற
பட்டினி கிடந்து கொடுப்பான்
நீரும் நெருப்பும் தொடாமல்
நெருங்கும் உறுப்பாய் இருப்பான்
உதிரம் சதையும் தருவதும்
உயர்த்தி பார்த்து மகிழ்வதும்
விதியை வெல்ல வைப்பதும்
உனது அப்பன் தானே
நதிக்கு பாதை அமைத்து
நடக்க சொன்ன அவனை
மதியால் மனதால் மறந்தால்
மனித தர்மமும் சாகும்
குருஐி