Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜல்லிகட்டை தடுப்பது மனநோய் !


ல்லிக்கட்டு

இந்த வார்த்தையை கேட்டால் தமிழ் சினிமா கதாநாயகர்கள் வீரமான காளைமாட்டை கொம்பை பிடித்து வளைத்து, நெரித்து நேருக்கு நேராக மோதி மாட்டை தரையில் தள்ளி, முஷ்டியை உயர்த்தும் காட்சி தான் நினைவுக்கு வந்தது.

அப்பாவியான ஒரு ஜீவனை அதற்கு சம்மந்தமே இல்லாமல் அதனோடு சண்டைபோட்டு வெற்றி பெறுவதில் ஆனந்த களிப்படைவதில் என்ன வீரம் இருக்கிறது? என்று அப்போது தோன்றியது இயற்கை,

இந்த கற்பனையை முற்றிலுமாக மாற்றி ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்ற எதார்த்தத்தை என்னை போன்ற பலருக்கும் தெரியவைத்தது, வசந்த் தொலைகாட்சியின் ஜல்லிக்கட்டு நேரடி ஒலிபரப்பு தான். காரணம் அதுவரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தெரியும், அதை பார்ப்பதற்கு கூடுகின்ற ஆயிரக்கணக்கான மக்களை பற்றி தெரியும், வெளிநாட்டு ஆர்வலர்களை பற்றி தெரியும், ஆனால் நேரில் சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தது கிடையாது. படித்த ஒன்றிரண்டு செய்திகள் கூட ஓடுகிற மாட்டை விரட்டி பிடித்து அடக்கினார்கள் வீரர்கள் என்பதாகத்தான் எழுதியிருப்பார்கள்.

இதை வைத்து பார்க்கும் போது ஜல்லிகட்டை பற்றி நல்ல அபிப்ராயம் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் தொலைகாட்சியின் நிகழ்ச்சியை பார்த்த பிறகு எண்ணம் முற்றிலுமாக மாறிவிட்டது. திட்டி வாசல் என்று அழைக்கபடுகின்ற சிறிய கதவு திறந்துவிடப்பட்டு மாடு வெளியில் வருகிறது. அடைபட்டு கிடந்த மாடு கும்பலாக நிற்கின்ற ஜனங்களை பார்த்து மிரண்டு ஓடுகிறது. ஓடுகிற மாட்டின் திமிலை பிடித்து சிறிது நேரம் மாடுபிடி வீரர்கள் என்று அழைக்கபடுகின்ற இளைஞர்கள் சிலர் அழுத்துகிறார்கள். யார் அதிகநேரம் திமிலை பிடித்துகொண்டு மாட்டோடு ஓடுகிறாரோ அவரே வெற்றி அடைந்தவராக கருதபடுகிறார்.

இதில் எந்த இடத்தில் மாடு கொடுமையை அனுபவிக்கிறது? தாங்க முடியாத வேதனை அதற்கு இதனால் எப்போது ஏற்படுகிறது என்பது எவ்வளவோ ஆழமாக சிந்தித்தாலும் தெரியவில்லை. மாடு ஏர் விழுகிறது, வண்டி இழுக்கிறது, செக்குகளை சுற்ற வைக்கிறது, கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க உதவி செய்கிறது இப்படி எத்தனையோ விவசாய வேலைகளுக்கு அது பயன்படுவது போல இதற்கும் பயன்படுகிறது. மாட்டை ஏர் உழ பயன்படுத்துவது இரக்கமற்ற செயலென்றால், ஜல்லிக்கட்டும் இரக்கமில்லாத செயல்தான்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஜல்லிகட்டை பற்றி நியாயமான குற்ற சாட்டு ஒன்று எழுந்தது. மாடு வேகமாக ஓடுவதற்காக அதற்கு மது கொடுக்கபடுகிறது, அதன் கண்களில் எலுமிச்சை பழ சாறு போன்ற காரமான திரவங்கள் ஊற்றபடுகிறது என்பது தான் அந்த குற்றசாட்டு, குற்றசாட்டு வந்த வேகத்திலேயே அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டு நடத்த பல நெறிமுறைகளை வகுத்து கொடுத்தது, அதன்படி எந்த சிக்கலும் இல்லாமல் நன்றாகத்தான் அது நடந்தது, பிறகு எப்படி ஜல்லிகட்டுக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்ததோ அது புரியவில்லை.
ஜல்லிக்கட்டில் வெற்றிபெறுபவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் காட்டுவதை போல வெள்ளையம்மாள் போன்ற பெண்களை பரிசளிப்பதோ, பத்து ஐம்பது ஏக்கர் நிலங்களை தானமாக வழங்குவதோ, கிரிகெட் விளையாட்டில் நடப்பது போல லட்ச கணக்கில் சூதாட்டம் நடப்பதோ ஜல்லிக்கட்டில் ஒருவேளை இருக்கிறதோ என்று நான் முன்பு நினைத்ததுண்டு,
ஆனால் பாவம் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு வேட்டி, சட்டை, அண்டா, குண்டா, அடுக்கு பானை என்று மிக எளிமையான பரிசுகளே வழங்கபடுகிறது. இந்த பரிசுகளை பெறுவதற்காகவா இத்தனை பெரிய எதிர்பார்ப்பும், காத்திருப்பும், ஆர்வமும் இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது? என்று நமக்கு தோன்றுகிறது.

ஜல்லிக்கட்டில் மாடு கொடுமைபடுத்த படுகிறதோ இல்லையோ மனிதன் அபாயத்தை சந்திக்கிறான், அதுவும் நேருக்கு நேராக தனக்கு இன்னது நேரும் என்று தெரிந்தே களத்தில் இறங்குகிறான், எதற்கு இந்த விஷபரிச்சை, பைசாவும் கிடைப்பதில்லை பெரிய புகழும் கிடைப்பதில்லை, இத்தனையும் தாண்டி உடலில் காயம் தான் கிடைக்கிறது, அது தெரிந்தே ஏன் அந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் ஆர்வத்தோடு குதிக்கிறார்கள்? சற்று யோசிக்க வேண்டும்.

பாரதி தேசபற்று பாடல்கள் பாடினானே அவனுக்கு பொன் கிடைத்ததா? பொருள் கிடைத்ததா? அட எதுவுமே வேண்டாம் ஒரு கவளம் சோறாவது கிடைத்ததா? ஆனாலும் அவன் பாடினானே. அது ஏன்? மாமல்லபுரத்தில் சிற்பங்கள் பலவற்றை செதுக்கி வைத்தானே பல்லவ மன்னன் அவனது எதிர்பார்ப்பு என்ன? புகழ் மட்டும் தான் அவன் வேண்டியது என்றால் தனது சிலைகளை விதவிதமாக வடித்து வைத்திருக்கலாமே அப்படி செய்யவில்லையே ஏன்?

வெளியில் சொல்லமுடியாத வார்த்தைகளில் வடிக்க முடியாத இனம் புரியாத ஏதோ ஒரு ஆர்வம், ஏதோ ஒரு வேட்கை, இதை செய் இதை செய் என்று மனிதனை உந்தி தள்ளுகிறது, அதற்கு காரணங்களை கண்டுபிடிக்க முடியாது, பயன்கள் இருக்கிறது என்று முடிவு செய்ய முடியாது, எல்லாவற்றையும் தாண்டிய ஆத்ம திருப்தி ஒன்றே அதில் உச்சத்தில் நிற்கிறது.

ஏறக்குறைய மாடுபிடி வீரர்களின் மனோ நிலையும் இப்படி தான் கண்ணுக்கு தெரியாத அந்த திருப்தியை அனுபவிக்க அவர்கள் துடிக்கிறார்கள், இந்த துடிப்பு இன்று நேற்று தோன்றியது அல்ல காலகாலத்திற்கு முன்பிருந்தே தோன்றியதாகும், இதை சட்டங்கள் போட்டோ, திட்டங்கள் வகுத்தோ தடுப்பது மனிதாபிமானமாக இருக்காது, அதை சம்மந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

ஜல்லிக்கட்டு மிருகங்களை வதைக்கிறது என்றால் கசாப்பு கடைகளை இழுத்து மூட வேண்டும், கோழி பண்ணைகளுக்கு சீல் வைக்க வேண்டும், மாமிசம் உண்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும், இது நடக்குமா? நடக்க தான் முடியுமா? இப்படி செய்வது புத்திசாலித்தனமாகுமா?

மனிதர்கள் பாதிக்கபடுகிறார்கள் என்றால் காளைகளிடம் மோதி மட்டுமா காயங்கள் ஏற்படுகிறது, சாலையில் பயணம் செய்தால், சமயலறையில் சமைத்தால், தோட்டத்தில் பூ பறித்தால் கூட அபாயம் உண்டு பாதிப்பு உண்டு. எதிர்விளைவுகள் இல்லாத காரியமே கிடையாது.

அதீதமான மனித நேயம் என்பதும், அகிம்சை என்பதும் மற்றவர்களை இம்சை படுத்துவதாக மாறிவிடும். இந்த உணர்வுகள் மிகவும் முற்றி போனால் குழந்தைக்கு சோறு ஊட்டுவது கூட மனித உரிமை மீறலாக தோன்றும். இந்த நிலையை மனநிலை பாதிப்பு என்பதோடு தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விலங்கின ஆர்வலர்கள் இதை உணர்ந்தாள் நன்றாக இருக்கும். 

தேரோட்டம் இல்லை என்றால் திருவிழா நின்று போகும் 
ஏரோட்டம் நின்று போனால் சோருட்டுதல் நின்று போகும் 
போராட்டம் இல்லை என்றால் நீதி செத்து விடும் 
எனவே ஜல்லிக்கட்டுக்காக மேடை ஏறி பேசுவதை விட, 
முழம் முழமாய் எழுதுவதை விட, 

தெருவில் இறங்கி அற வழியில் போராடுவதே சிறந்த தீர்வாகும். காந்திஜியின் அற போராட்டத்திற்கு சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே மண்டியிட்டது என்றால், இப்போதைய அரசு நிர்வாகம் என்ன செய்து விட முடியும் 



Contact Form

Name

Email *

Message *