( குருஜியை நேரில் சந்திப்பதற்கு...!! click here --- குருஜியிடம் பேசுவதற்கு...!! click here --- )



ராமனுக்கு பிடித்த துளசி




   கவான் கண்ணனுக்கு துளசிமாலை அணிவிப்பது போல ஸ்ரீ ராமபிரானுக்கும் துளசிமாலை சாற்றி வழிபாடு செய்யலாமா? 


இப்படிக்கு ,
ரேணுகாதேவி ,
அமெரிக்கா .



    துளசியும் துளசியின் நிழலும் கூட எனக்கு மிகவும் பிடித்தமான இடமென்று கண்ணன் சொல்கிறான். நீ வழிபாடு செய்கிறபோது எனக்கு படைப்பதற்கு எதுவுமே உனக்கு கிடைக்கவில்லையா கவலைப்படாதே ஒரு காய்ந்த துளசியிலை இருந்தாலும் போதும், அது கூட இல்லையா துளசி வளர்ந்த இடத்தில் இருக்குமே மண் அந்த மண்ணின் ஒரு சிறு துளியை கூட எனக்கு அர்ப்பணம் செய்து நீ வழிபடலாம். என்று கண்ணன் நமக்கு தனது எளிமையை மிக அழகாக சொல்லி நான் ஆடம்பரங்களை விரும்புவன் அல்ல அன்பை மட்டுமே நேசிப்பவன் என்று காட்டிவிடுகிறார்.

அப்படிப்பட்ட கண்ணபெருமானுக்கு எந்த துளசி இலையாக இருந்தாலும் ஏற்றது தான் என்றாலும் கருந்துளசி இலை அவனுக்கு மிகவும் பிடித்தது. அதே போல வெண்துளசி ராமனுக்கு ஏற்றது என்று சொல்வார்கள் வெண்துளசி என்பது இளம் பச்சை நிறத்தில் இருக்கும் இதுதவிர செந்துளசி என்ற  துளசி உண்டு இது மிகவும் அரிதானது இந்த துளசி அன்னை மகாலஷ்மிக்கு மிகவும் பிடிக்குமாம் இதை கொண்டு பூஜை செய்தால் மகாலஷ்மி மகிழ்ந்து செல்வ வளத்தை வாரித்தருவாளாம் இறைவனுக்காக உள்ளன்போடு அர்ப்பணம் செய்தால் எல்லாம் கிடைக்கும்.



வயிற்றுக்குள் உறங்கிய ஓலம் !



      பெருமாள் கோவில் மடப்பள்ளியில் காரியங்கள் பண்ணுபவர் போல் பருத்து குடைசாய்ந்த வயிறு புடைத்துக்கொண்டு நிற்பது போன்ற மூக்கு. எப்போதுமே உருண்டுகொண்டே இருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைக்கும் பெரிய கண்கள். யானையின் தோள்பட்டையில் உலக்கைகளை சொருகியது போன்ற கைகள். உடல் பாரத்தை தாங்க முடியாமல் வளைந்து வளைந்து நடக்கும் குட்டை கால்கள். இது தான் தொப்பை கணேசனின் உருவம். கருப்பு என்றால் அப்படியொரு கருப்பில் நெற்றி நிறைய விபூதி பட்டையில் வெற்றிலை காவி தெரியும்படியாக பல்லை காட்டி அவர் சிரிக்கும் போது என்னவோ போல் இருக்கும். இந்த தோற்றத்தில் நீங்கள் கூட உங்கள் ஊரில் தொப்பை கணேசர்களை தினசரி பார்க்கலாம்.

அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது ஒருவேளை கணேசன் என்பது கூட அவர் பெயராக இருக்கலாம் முதன்முதலில் காலை பத்துமணி ரெயிலுக்கு எங்கள் ஊரில் அவர் வந்து இறங்கிய போது இது என்ன தொப்பை கணேசன் போல ஒரு கேசு நம்ம ஊருக்கு வந்திருக்கு என்று கோபால் சொன்னான் அன்று முதல் அவர் அனைவராலும் தொப்பை கணேசன் என்று அழைக்கப்பட்டார். எப்படியும் பத்துவருடம் இருக்கும் அவர் இங்கு வந்து ரெயிலில் இறங்கியவர் பிறகு எத்தனையோ ரயில் வந்து நின்று போனாலும் திரும்ப ஏறியதே இல்லை. எதோ மாமியார் வீட்டிலிருந்து அடித்து துரத்தபட்டவள் தாய்வீட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தது போல் இந்த ஊரிலேயே இருந்துவிட்டார். 

யாரோடும் அதிகம் பேசமாட்டார் அப்படியே பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார் அதுவும் நமக்கு சரிவர புரியாது. யார் என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார். ஊரில் உள்ளவர்களுக்கு கல்யாணம், மஞ்சள் நீர் என்று சுப நிகழ்சிகள் நடந்தாலும் சாவு, கருமாதி என்று அசுப நிகழ்வுகள் நடந்தாலும் கணேசனை கூப்பிடாமல் இருக்க மாட்டார்கள் குடம் குடமாக தண்ணீர் எடுத்து ஊற்றுவார் எவ்வளவு பெரிய மரக்கட்டையாக இருந்தாலும் அலுக்காமல் விறகு பிளந்து போடுவார் பண்டபாத்திரங்கள் எடுத்து வருவதாக இருக்கட்டும் அவைகளை சுத்தம் செய்வதாக இருக்கட்டும் மிக நேர்த்தியாக ஒரு முகச்சுளிப்பு கூட இல்லாமல் செய்வார். பணமென்று அதிகம் எதிர்பார்க்க மாட்டார் கொடுத்ததை வாங்கி கொள்வார் ஆனால் தரமறுத்தாலும் சாப்பிடாமல் இடத்தை விட்டு நகரமாட்டார். 

தியானம் செய்பவர்கள் தன்னைமறந்து தியானம் செய்வார்கள் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் பார்த்தது இல்லை. ஆனால் தொப்பை கணேசன் சாப்பிடும்போது பார்த்தால் அங்கு இங்கு என்று கவனம் சிதறாமல் பார்வை கூட மாறாமல் சாப்பிடுவது தியானம் செய்வது போலவே இருக்கும். வாழை இலையோ, தையல் இலையோ இருப்பதில் பெரியதாக எடுத்துகொள்வார் அதில் கோபுரம் போல சாதத்தை கொட்டி அதன்மீது ஒரு குவளை சாம்பாரை அபிஷேகம் செய்து உருட்டி, உருட்டி சாப்பிடுவார் சாம்பாருக்கு எந்த அளவு சாதம் எடுத்து கொண்டாரோ அதே அளவு குழம்பு, ரசம், மோர் என்று போய்க்கொண்டே இருக்கும். அவர் ஒருவேளைக்கு சாப்பிடும் சாப்பாட்டை குறைந்தது நான் மூன்று நாளாவது சாப்பிடுவேன். 

இவ்வளவு சாப்பிட்டாலும் மனுஷன் இலையிலிருந்து எழுந்த மறுநிமிடமே அடுத்த வேலை எதாவது சொன்னால் சலிக்காமல் செய்வார் உணவுக்கு பிறகு கொஞ்சம் ஓய்வாக இருக்கவேண்டும் என்று நினைப்பதே கிடையாது. மனிதனாக பிறந்ததே உண்பதற்கும் வேலை செய்வதற்கும் என்பது போல நடந்து கொள்வார். அவரை பார்ப்பதற்கே எனக்கு அதிசயமாக இருக்கும் இப்படி ஒரு மனிதன் வாழ முடியுமா? என்று நான் பலமுறை யோசித்ததுண்டு. அவருக்கு வேலை கொடுக்கிற அளவிற்கு யார்வீட்டிலும் வேலை இல்லை என்றால் அவர் கதை மிகவும் கந்தலாகிவிடும். யாரிடமும் போய் பசிக்கிறது சோறுபோடு என்று கேட்கமாட்டார் எத்தனை நாளானாலும் அம்மன் கோவில் அரசமரத்து மேடையில் படுத்து தூங்குவதும் தாகம் வந்தால் குழாயில் வருகிற தண்ணீரை பிடித்து குடிப்பதுமாக இருப்பார். 

அவரை பார்த்த மாத்திரத்திலேயே இவருக்கு கொஞ்சம் மூளைவளர்ச்சி போதாது என்று சொல்லிவிடலாம் அரைகிறுக்கான ஒரு மனுஷனை கேலி கிண்டல் செய்து விளையாட்டு பொருளாக பார்ப்பது தான் சமூகத்தின் இயல்பு. ஆனால் தொப்பை கணேசனை பொறுத்தவரை நாங்கள் யாரும் அவரை கேலி பேசுவதே கிடையாது சின்ன பசங்க கூட அவரை பார்த்தால் ஒதுங்கி போவார்களே தவிர கிண்டலாக விளையாட மாட்டார்கள். அவரும் யாரும் தன்னை ஒரு வார்த்தை சொல்லும்படி நடந்து கொண்டது இல்லை 

அவர் தூங்குவது தங்குவது எல்லாமே அம்மன் கோவில் மண்டபத்தில் தான் காலையில் எப்போது விழிப்பார் என்று யாருக்கும் தெரியாது இரவில் அவர் உறங்குவாரா என்பது கூட சந்தேகம் தான். ஒருநாள் விடியற்காலை மூன்று மணிக்கு முதல் பஸ் பிடித்து நாகர்கோவில் போவதற்காக பிள்ளையார் கோவில் பக்கம் போனேன் எங்கள் ஊரில் பஸ்ஸ்டான்ட், கடைத்தெரு எல்லாமே பிள்ளையார் கோவில் அம்மன்கோவில் மைதானம் தான் அன்று அப்படி மூன்றுமணிக்கு போனபோது கணேசன் அரசமரத்திலிருந்து விழுந்துகிடக்கும் சருகுகளை பொறுக்கி ஒரு இடத்தில் கும்பலாக போட்டுக்கொண்டிருந்தார் அவர் இதைபோல எதையாவது செய்தவண்ணம் தான் இரவு நேரங்களில் பலர் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் மனுஷன் காலை ஐந்துமணிக்கெல்லாம் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியவர் போல கிணற்றில் தண்ணீர்வாரி குளித்துவிட்டு ஈர நெற்றியில் பட்டையாக விபூதியை சாற்றி சற்று பழுப்பேறி இருக்கும் கிழிந்த வேட்டியை மார்பு வரை தூக்கி கட்டிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் காலையில் யாராவது வேலைக்கு கூப்பிட்டால் அன்று காலை உணவு நிச்சயம். இல்லை என்றால் வேலை வரும்வரை காத்திருக்க வேண்டியது தான் பரிதாபப்பட்டு யாரவது பணம் கொடுத்தால் வாங்கி வைத்திருப்பார் அதை வைத்து இட்லி தோசை வாங்கி சாப்பிடலாமே என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் இதுவரை அவர் கடைப்பக்கம் போனதையோ பொருள் ஏதாவது வாங்கியதையோ யாரும் கண்டதில்லை. 

உறங்குவதில்லை வேளா வேளைக்கு உண்ணுவது இல்லை கையில் காசு இருந்தால் கூட எதுவும் வாங்கி அனுபவிப்பதில்லை ஒரு பீடி, சிகரெட் கூட பயன்படுத்துவதில்லை. இவருக்கும் ஒரு மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது உணர்வுகளே இல்லாமல் கடவுள் ஒரு ஜீவனை படைத்துவிட்டானே இது என்ன படைப்பு இப்படி படைப்பதை விட படைக்காமல் இருந்திருக்கலாமே என்று நான் பலமுறை அவரை பற்றி யோசித்ததுண்டு ஆனால் அந்த யோசனை எல்லாம் பெரிய தவறு என்பதை ஒரு நாள் தெரிந்துகொண்டேன்.

அன்று தங்கம்மை பாட்டி செத்துப்போய்விட்டார்கள் பாட்டிக்கு என்று சொந்தபந்தங்கள் ஏதும் இல்லை ஏறக்குறைய பாட்டியும் தொப்பை கணேசனும் ஒன்றுதான் பாட்டிக்கு வயதாகிவிட்டது அதனால் வேலை செய்ய முடியாது ஆனாலும் பசி எடுத்தால் நாலு வீடு கேட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ளும். ஊர் கதைகளை பேசுவதும் தெரிந்தவர்களை குசலம் விசாரிப்பதும் பாட்டியின் வழக்கங்களில் ஒன்று. நல்லவேளை நோய் அதுஇது என்று வந்து பாடுபட்டு சாகாமல் தூக்கத்திலேயே நிம்மதியாக போய்சேர்ந்து விட்டது ஊர் ஜனங்கள் கூடிவிட்டார்கள் பாட்டி அநாதை பிணம் ஊர் பொதுவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் அவரவர் கையில் உள்ள காசுகளை கொடுங்கள் என்று இளைஞர்கள் கேட்டார்கள்.

பணம் எடுத்துவருவதாக சொல்லி வீட்டுக்கு போன ஜனங்களில் முக்கால்வாசி பேர் திரும்ப வரவில்லை அப்படியே வந்தவர்களும் நாலணா எட்டணா என்று தந்தார்களே தவிர உருப்படியாக எதுவும் தரவில்லை என்ன செய்வது ஒரு மாலை வாங்கவேண்டும் என்றால் கூட ஐம்பது ரூபாய் செலவாகுமே என்று யோசித்துகொண்டிருந்தோம் 

பாட்டியின் பிணத்தின் பக்கத்தில் முழங்கால் கட்டி உட்கார்ந்திருந்த தொப்பை கணேசன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று எங்கோ எழுந்து போனார் ஒரு பத்து நிமிடத்தில் திரும்பி வந்திருப்பார் வந்தவர் தனது மடியை அவிழ்த்து எங்கள் முன்னால் கொட்டினார் ஐந்தும், பத்துமாக நிறைய பணம் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது இருக்கும். 

அத்தனை பணத்தையும் என் கையில் வாரி கொடுத்தவர் ஐயோ அம்மே என்று கிழவியின் மேல் விழுந்து அழுதார். அந்த அழுகைச்சத்தம் அவர் தொண்டையிலிருந்து வரவில்லை தொப்புளுக்கு கீழே அடிவயிற்றிலிருந்து கிளம்பி வாய்வழியாக தாய்ப்பசுவை இழந்துவிட்ட ஒரு கன்றின் ஓலமாக வெளியே வந்தது 

இவரையா உணர்ச்சி இல்லாத மரக்கட்டை என்று நினைத்தேன் அப்படி இவரை நினைத்த நான் அல்லவா உணர்சிகளை புரிந்துகொள்ள முடியாத மரக்கட்டை இவரை போன்ற உணர்ச்சி உள்ள மனித ஜென்மங்கள் வாழ்வதனால் தான் மழை வருகிறது என்பதை நான் மறந்து போனேனே .





பெயரை அதிஷ்டமாக்குவது எப்படி?



     னிதனுக்கு பெயர் என்பது மிகவும் முக்கியம் ராமச்சந்திரன் என்று சொன்னவுடனேயே நமது கண்முன்னே தெரிவது தசரதனின் குமாரன் ராமனோ இல்லையோ நமக்கு தெரிந்த நெருங்கி பழகிய சொந்தக்காரனான ராமச்சந்திரனின் முகம் தான் நினைவுக்கு வரும். அதன்பிறகு தான் எந்த ராமச்சந்திரன் என்று தெரிந்துகொள்ள முற்படுவோம். அந்த அளவு பெயர் என்பது ஒரு மனிதனோடு பின்னி பிணைந்து இருக்கிறது பெயர் இல்லாமல் எதையும் நம்மால் நினைவில் வைத்துகொள்ளவும் முடியாது அடையாளம் தெரிந்து கொள்ளவும் இயலாது.

பெயருக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்தவுடனே சிலர் ஒரு மனிதனின் வாழ்வையே பெயர் தான் நிர்மாணிக்கிறது ஒருவனுக்கு நல்லதொரு பெயர் அமைந்துவிட்டால் அவன் வாழ்க்கையின் உச்சத்திற்கே சென்றுவிடுவான் என்று சொல்கிறார்கள். ஆனால் பெயர்களை பொறுத்தவரை அது எந்தநாட்டு பெயராக இருந்தாலும் எந்த மதத்து பெயராக இருந்தாலும் அல்லது மதத்தின் நிழல் கூட தீண்டாத பெயராக இருந்தாலும் அவைகளுக்கு தனிப்பட்ட சக்தி இருப்பதாகவோ அந்த பெயர் மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை தீர்மானிப்பதகவோ கருதிவிட முடியாது. 

பன்னீர்தாஸ் என்ற பெயரை நிறையப்பேர் வைத்திருக்கிறார்கள் அந்த பெயருடைய பலரும் பலநிலையில் இருப்பவர்களாக இருக்கிறார்களே தவிர அனைவருமே வி. ஜி. பன்னீர்தாஸ் போல் புகழ்பெற்று விடவில்லை. இதிலிருந்தே ஒரு பெயருக்கும் ஒருவருடைய வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை என்று மேலோட்டமாக நாம் முடிவு செய்யலாம். ஆனால் நமது அனுபவத்தை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கொண்டுசென்று சிந்தித்தோம் என்றால் நேற்றுவரை ஒரு பெயரில் இருந்தவன் இன்று வேறொரு பெயரை பெற்றவுடன் வாழ்வில் மாறி இருப்பதையும் தேறி இருப்பதையும் மறுக்க முடியாத சூழலில் உள்ளோம். எனவே பெயரிலும் கூட எதோ ஒரு காந்தசக்தி இருக்க வேண்டுமென்று தெரிகிறது. 

ஒரு மனிதனுடைய பெயர் அவன் பிறந்தபிறகு உருவாக்கபடுகிறது என்று நாம் நினைக்கிறோம் ஆனால் நாடிஜோதிடத்தை உருவாக்கிய ரிஷிகளில் பலர் அப்படி நினைக்கவில்லை ஒருவன் பிறப்பதற்கு முன்பே அவன் கருவில் இருக்கும் போதே அவனுடைய பெயர் தீர்மானிக்க படுகிறது என்று கருதுகிறார்கள். இன்னாருக்கும் இன்னாருக்கும் பிறக்கும் இவனுக்கு இந்த பெயரை வைக்கிறேன் என்று பிறகு யாராவது பெயர் சூட்டுவது முன்பே தீர்மானிக்கப்பட்ட பெயரை தான் என்பது அவர்களின் கருத்து. 

இந்த கருத்தை தவறு என்று நம்மால் ஒதுக்கிவிட முடியவில்லை ஒரு குழந்தை பிறக்கிறது பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு இன்ன பெயர் வைக்கவேண்டும் என்று தாயோ தகப்பனோ நினைக்கிறார்கள் ஆனால் சம்மந்தமே இல்லாத வேறு யாரோ வந்து ஒரு பெயரை சூட்டிவிடுகிறார்கள் அதுவும் காலபோக்கில் நிலைத்து விடுகிறது. இன்னும் சிலருக்கு பிறக்கும் போது வைத்த பெயர் வளர்ந்து பெரியவராக வருவதற்கு முன்பே மாறிவிடுகிறது. சம்மந்தமே இல்லாத பெயர்களில் அவர்கள் அழைக்கபடுவார்கள். 

நாகரீகம் கட்சி கொள்கை மதமாற்றம் போன்றவற்றாலும் பெயர்கள் மாற்றபடுகின்றன பெயர் மாற்றத்தில் நம்பிக்கையுடையவர்களும் இலக்கிய உலகில் புனைபெயரோடு வலம்வர வேண்டும் என்று விரும்புகிறவர்களும் பெயர்களை மாற்றி கொள்கிறார்கள். ஒருசிலர் தங்களது பெயரை அடிக்கடி மாற்றி கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். இப்படி ஆயிரம் முறை பெயர்களை மாற்றினாலும் அனைத்து பெயர்களுமே நிலைத்து நிற்பதில்லை ஒரு மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரே ஒரு பெயர் மட்டுமே கடேசிவரை நிலைத்து நிற்கும் அந்த பெயரை வைத்தே அவன் அழைக்கபடுவான் அப்படி அழைக்கப்படும் பெயரே அவன் பிறப்பதற்கு முன்பே அவனுக்கென்று தீர்மானிக்கப்பட்ட பெயராக இருக்கும். 

அப்படி தீர்மானிக்கப்பட்ட பெயரை ஒருமனிதன் பெறவேண்டும் அப்படி பெற்றால் தான் அந்த பெயர் அவனுக்கு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி மன வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் கொடுக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக பலருக்கு தீர்மானிக்கப்பட்ட பெயர்கள் அதிஷ்டகரமாக அமைவதில்லை. அதிஷ்டபெயர் அமையவில்லையே என்பதற்காக பெயர்களை மாற்றி கொண்டே இருபதிலும் எந்த அர்த்தமும் கிடையாது. 

சிலர் எண்கணித ஜோதிடப்படி பெயர்களில் உள்ள சில எழுத்துகளை கூட்டியோ குறைத்தோ மாற்றி அமைத்து கொள்கிறார்கள் அதுவும் சரியான வழக்கம் என்று சொல்லிவிட முடியாது. பெயர் என்பது பிறர் நம்மை அழைப்பதற்கே அப்படி அவர்கள் அழைக்கும் போது என்ன ஒலி அலை வருகிறதோ அந்த அலைதான் நமது பெயருக்குரிய அதிர்வாகும். அந்த அதிர்வை எழுதும் போது மட்டும் எழுத்தை மாற்றிபோட்டு எழுதுவதினால் வரபோவதில்லை. 

எனவே பலர் நம்மை எப்படி அழைக்கிறார்களோ சமுதாயத்திலும் குடும்பத்திலும் நமது பெயர் எப்படி நிலைத்திருக்கிறதோ அந்த பெயர் தான் நமக்குறிய பெயராகும். அதைவிட்டு விட்டு வேறு பெயர்களை மாற்றி அமைத்தால் நமது வாழ்க்கையும் மாறும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. எனவே பெயர்களை மாற்றுவதை விட்டு விட்டு நமக்கென்று அமைந்த பெயரை வலுவாக மாற்ற முயற்சிக்க வேண்டும் அது எப்படி பெயரை வலுவாக மாற்றுவது? என்று பலர் யோசிக்கலாம் அதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. 

மந்திரங்கள் என்று சொல்கிறோமே அவைகளும் சாதாரணமான வார்த்தைகளால் உருவானவைகளே ஆகும். மற்ற வார்த்தைகளுக்கு இல்லாத சக்தி மந்திர வார்த்தைகளுக்கு கிடைப்பது எப்படி? அந்த வார்த்தை பலராலும் பல நேரங்களிலும் பலமுறை திரும்ப திரும்ப சொல்லபடுகிறது. ஒருவார்த்தை பலமுறை உச்சரிக்கப்படும் போது அதில் ஒருவிதமான சக்தி உருவாகுகிறது அந்த சக்தி தான் பிரணவத்தில் உள்ள நாத சக்தியாகும். நமது பெயரையும் மந்திரங்கள் போல் மீண்டும் மீண்டும் சொல்வதினால் அதற்கு ஒரு சக்தி கிடைக்கிறது.

உதாரணமாக அரசியல் தலைவர்கள் மற்ற துறை பிரபலங்களின் பெயர்களை சொல்லும்போதே ஒருவித அதிர்வுகள் நமக்கு தெரிகிறதே அது ஏன்? அவர்கள் பெயரை தினசரி பலநூறு பெயர்கள் பலநூறு தடவை சொல்கிறார்கள். அதனால் அதனுடைய அதிர்வலைகள் விரிவடைந்து அவர்கள் பெயர்கள் ஒரு மந்திரம் போல ஆகிவிடுகிறது. நமது பெயரும் மந்திரம் போல் ஆனால் நமது வாழ்விலும் மலர்ச்சியும் தெளிவும் தானாக ஏற்படும். 

அதற்கு என்ன செய்ய வேண்டும்? செய்யவேண்டிய காரியம் மிகவும் சுலபமானது தினசரி நம் பெயரையே மனதிற்குள் மீண்டும் மீண்டும் நாமே உச்சரிக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக உச்சரிக்கிறோமோ அவ்வளவு விரைவில் நமது பெயர் சக்திமிகுந்ததாக மாறும். அப்படி மாறினால் மட்டுமே பெயருக்கு மகத்துவம் ஏற்படும் அதைவிட்டு விட்டு மாதத்திற்கு ஒரு பெயர் என்று மாற்றி கொண்டே போனால் எந்த பயனும் இல்லை.



குடுகுடுப்பைக்காரன் குறிசொன்னால் நடக்குமா?




    குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் மிகவும் இக்கட்டான சூழலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன் தயவுசெய்து உடனடியாக பதில்தருமாறு வேண்டுகிறேன். சென்ற வாரத்தில் இரவு ஒருமணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் என் வீட்டு வாசலில் வந்த குடுகுடுப்பைக்காரர் இந்த வீட்டுக்காரர் சென்றமாதம் நீதிமன்றம் போய்வந்திருப்பார் அவருக்கு இன்னும் இரண்டுமாதத்தில் ஆயுள் முடியப்போகிறது என்று சொன்னார். அதை கேட்டதிலிருந்தே எனக்கு நிம்மதி இல்லை காரணம் சென்றமாதத்தில் நான் சொத்து விஷயமாக ஒரு வழக்கிற்கு நீதிமன்றம் செல்லவேண்டிய நிலைவந்தது போய்விட்டு வந்தேன் அது அந்த குடுகுடுப்பைக்காரர் மிகச்சரியாக கூறியதனால் என் மரணமும் அப்படியே நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சுகிறேன் ஆயிரம் தைரியமாக பேசினாலும் சாவு வரப்போகிறது என்றவுடன் சராசரி மனிதனால் அச்சப்படாமல் இருக்க முடியுமா? என்னால் வேலைகளை கவனிக்க முடியவில்லை மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக பேசமுடியவில்லை தயவு செய்து அவர் கூறியபடி நடக்குமா? அதை தடுக்க ஏதாவது பரிகாரம் உண்டா? என்பதை எனக்கு சொல்லி என்னை காப்பாற்றுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு 
ரகுநாதன் 
மணப்பாறை 







    முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன் உங்கள் ஜாதகப்படி உங்கள் ஆயுளுக்கு எந்த தோஷமும் இல்லை பாதகமும் இல்லை இன்னும் முப்பது வருடங்கள் நன்றாக வாழ்வீர்கள் என்று உறுதியாக சொல்லலாம். எனவே மனதில் உள்ள தேவையற்ற பயத்தை முதலில் அப்புறப்படுத்துங்கள். ஜாதகத்தின் நிலை இப்படி இருக்கும் போது குடுகுடுப்பைக்காரன் அப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கேட்கலாம்.

பொதுவாக குடுகுடுப்பைக்காரர்களை ஜாமகோடங்கி என்று அழைப்போம். ஜாமகோடங்கி என்றால் “இரவு நேரத்தில் குறிசொல்பவர்” என்பது பொருளாகும். இந்த கோடங்கிகள் இரவு நடுநிசிக்கு மேல் மயானத்திற்கு சென்று தன்னை நிர்வாணப்படுத்திகொண்டு காளிமாதாவின் அம்சமான ஜக்கம்மாதேவிக்கு பூஜை செய்வார்கள் அப்படி பூஜை செய்து தேவியை தன்னோடு அழைத்து கொண்டு கிராமங்களில் உள்ள தெருக்களில் வருவார்கள் சில வீடுகளுக்கு முன்னால் வருகிற போது ஜக்கம்மாள் அவருக்கு சொல்கிற சங்கதிகளை உடுக்கை சத்தத்துடன் பாடலாக பாடி குறி சொல்வார். 

என் அனுபவத்தில் குடுகுடுப்பைக்காரர்கள் சொல்லுகின்ற கடந்த கால விஷயங்கள் மிக சரியாக இருக்கும் எதிர்காலத்தை பற்றி அவர்கள் கூறுவது எதுவும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை ஆனால் சில பெரியவர்கள் அந்த காலத்தில் குடுகுடுப்பைகாரர்கள் நிஜமாகவே மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். அதனால் அவர்கள் சொல்கிற முக்கால பலன்களும் தப்பாமல் நடந்தது இப்போது அவர்களின் மந்திர பயிற்சி சிறப்பாக இல்லை அதனால் பாதி நடக்கிறது மீதி நடப்பதில்லை என்கிறார்கள். 

இன்றைய கோடங்கிகளில் பலர் மக்களின் அச்சத்தை தவறுதலாக பயன்படுத்தி காசு பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் ஒருசிலர் பரிகாரம் செய்யும் நேரத்தில் பெண்களிடம் உள்ள தங்கநகை மற்றும் விலை உயர்ந்த பொருள்களை களவாடுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். கள்ளம் கபடம் இல்லாத அந்த நாடோடி இன மக்களை கெடுத்ததில் நாகரீக மனிதர்களாகிய நமக்கு நிறைய பங்குண்டு அது வேறு விஷயம். அதை இங்கு பேசவேண்டாம். எனவே கோடங்கியின் தகவல்களை வைத்து அச்சப்படவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் காலனையே காலால் உதைத்த சிவபெருமானை வழிபடுங்கள் மரணபயம் விலகும்.



பாவம் செய்தால் பரிசா கிடைக்கும்?



    கான் யோகி ஸ்ரீ இராமானந்த குருவுக்கு வணக்கம். எனக்கு நாற்பது வயது ஆகிறது இதுவரை என்வாழ்வில் குறிப்பிட்டு சொல்லும்படியான இன்பம் என்பதே நடந்தது இல்லை. மிகச்சிறிய வயதில் தந்தையை இழந்தேன் படிக்க ஆசை இருந்தும் குடும்பச்சூழல் காரணமாக பழைய இரும்பு கடைக்கு வேலைக்கு போனேன் திருமணம் முடிந்து சொந்த தொழில் துவங்கி ஓரளவாவது வெற்றிபெறலாம் என்ற விருப்பத்தில் செயல்பட்டேன் கட்டிய மனைவி நிரந்தர நோயாளி. துவங்கிய தொழில் என்னை கடன்காரனாக்கி மீண்டும் வேலைக்காரனாக மாற்றிவிட்டது ஒரு வயிற்றுக்கே ஓடமுடியாமல் ஓடிய நான் இப்போது இரண்டு வயிறுகளுக்காக ஓடுகிறேன் ஒன்றும் முடியவில்லை. இந்த நிலையில் ஒரு ஜோதிடரை சந்தித்தேன் அவர் என் ஜாதகத்தை பார்த்துவிட்டு உன் முன்ஜென்மத்தில் ஒருபெண்ணின் சாபம் இருக்கிறது அதனால் தான் நீ அல்லல் படுகிறாய் என்று சொல்லிவிட்டார் உண்மையாகவே அப்படி ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அது விலக நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து நல்ல வழிகாட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு 
ராதாகிருஷ்ணன் 
தாம்பரம் 
சென்னை 




     விதைத்ததை அறுக்க வேண்டும் அறுத்ததை சுமக்க வேண்டும் இந்த விதியிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது மற்றவர் காலில் குத்த வேண்டுமென்று கண்ணாடி ஓட்டை பாதையில் போட்டால் அது என்றாவது ஒருநாள் காத்திருந்து நம் கண்களையே குத்தும். இந்த எளிய விளக்கம் தான் வினைப்பயன் என்ற தத்துவத்தின் உண்மை பொருள் 

ஒவ்வொருவர் ஜாதகத்திலும் ஐந்தாமிடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் உள்ள கிரக அமைப்புகளை வைத்து ஒருவரின் சென்ற ஜென்மா பலன்கள் என்னவென்று ஓரளவு தீர்மானித்து விடலாம். போன பிறவியில் நல்லது செய்தால் நல்லதும் அல்லது செய்தால் தீயதும் வருமென்று இந்த இடம் தெளிவாக காட்டி நம்மை எச்சரிக்கும்.

சென்ற பிறவியில் நாம் நல்லது செய்தோமா? தீயது செய்தோமா? என்று நமக்கு தெரியாது இந்த பிறவியில் நல்லதை செய்ய துவங்கினால் வரும் பிறவியில் துன்பம் இல்லாது வாழலாம் என்பதற்காகவே நமது முன்னோர்கள் அறம் செய்ய விரும்பு என்றார்கள் அதை நாம் எக்காலத்திலும் கருத்தில் கொள்ளவில்லை என்பதற்கு ஆதாரமே வாழ்க்கை முழுவதும் துன்பத்தை அனுபவிப்பது. 

வினைப்பயனாக கஷ்டங்கள் வருகிறது என்றால் அதை மெளனமாக அனுபவித்து விடுவதே என்னை பொறுத்தவரை சிறந்ததாகும். காரணம் இந்த சிறிய கஷ்டங்களிலிருந்து விடுவித்து கொள்ள பரிகாரங்களை தேடினால் நாளை இதே கஷ்டம் மிகப்பெரியதாக கண்டிப்பாக வரும் அதை அனுபவிக்காமல் தப்ப இயலாது. 

இருந்தாலும் இறைவன் என்பவன் கண்டிப்பு மிகுந்த நீதிபதியாக மட்டுமே இருப்பது இல்லை கருணை மிகுந்தவனாகவும் இருக்கிறான். கோடை வெப்பத்தில் தகித்தாலும் குளிர்தருகிற நிழலையும் தென்றலையும் தராமல் போகமாட்டான் துன்பங்களுக்கும் எல்லை வகுத்திருப்பான் அதுவரை பொறுமையோடு காத்திருந்தால் கஷ்டங்கள் விலகாமல் போகாது. உங்கள் வாழ்விலும் அப்படிப்பட்ட ஒரு நிலை வரும் அதுவரை அதாவது இன்னும் மூன்று வருடங்கள் காத்திருங்கள் கண்டிப்பாக கஷ்டங்கள் விலகி நன்மை நடக்கும். அதுவரை துன்பத்தை தாக்குப்பிடிக்க உறுதியான மனதை வேண்டி ஸ்ரீ ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்யுங்கள் உங்களுக்கு அவர் நன்மையை தருவார்.



சூன்யம் இருக்கிறதா?



    றுமை, துர்மரணம், பித்துபிடித்தல், வீட்டைவிட்டு ஓடிப்போகுதல் இப்படி இன்னும் எத்தனை விதமான துன்பங்கள் உண்டோ அத்தனையும் எங்கள் குடும்பத்தில் கடந்த பத்துவருடமாக நடந்து வருகிறது உங்கள் உறவினர்களில் ஒருவர் சூன்யம் வைத்திருக்கிறார். அதனால் தான் உங்கள் குடும்பம் இப்படி அழிகிறது எனவே நல்ல மாந்திரீகரை பார்த்து சூன்யத்தை எடுங்கள் இல்லை என்றால் எல்லாமே தரைமட்டமாகி விடுமென்று சொல்கிறார்கள். உண்மையாகவே எங்கள் குடும்பத்திற்கு அப்படி ஏதாவது மந்திர பாதிப்புகள் இருக்கிறதா? அப்படி இருந்தால் என்ன செய்வது என்பதை சொல்லி குருஜி அவர்கள் என் குடும்பத்தை காப்பாற்றுமாறு பணிவோடு வேண்டுகிறேன். 


இப்படிக்கு 
ராஜலஷ்மி 
நாகர்கோவில் 



      த்தியை வைத்து அறுவைசிகிச்சையும் செய்யலாம் கொலையும் செய்யலாம் ஏறக்குறைய மந்திரங்களும் அப்படியே! நல்ல மந்திரங்களால் நன்மை விளையும் என்று கூறுவது எந்தவகையில் சரியோ அதே அளவு தீய மந்திரங்கள் கெடுதியை விளைவிக்கும் என்பதும் உண்மையே. 

ஒரு நல்ல மந்திரத்தை தினசரி சொல்லி வருகிறேன் அது எனக்கு நன்மை செய்கிறது என்றால் அது வாதப்படி சரி தீய மந்திரத்தை நான் சொல்வதே கிடையாது இன்னும் சொல்வதாக இருந்தால் அது என்னவென்றே எனக்கு தெரியாது நிலைமை அப்படி இருக்க எந்த வகையிலும் என்னோடு சம்பந்தபடாத அந்த மந்திரம் எப்படி என்னை பாதிக்கும் என்று சிலர் கேட்கலாம் இது தவறுதலான கேள்வி அல்ல. ஆனால் மந்திரங்களை பற்றி அறியாமல் கேட்கும் கேள்வியாகும். 

மந்திரங்களை நமக்காகவும் பயன்படுத்தலாம் மற்றவர்களுக்ககவும் பயன்படுத்தலாம். நமக்காக பயன்படுத்த அவ்வளவு பயிற்சி தேவையில்லை ஈடுபாடும் மன ஒருநிலைப்பாடும் இருந்தால் மட்டும் போதுமானது பிறருக்காக பயன்படுத்தும் போது அதற்கென்று பிரத்யேகமான பயிற்சிகளும் தகுதிகளும் தேவை. இந்த இரண்டும் ஒருசிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடுகிறது இவர்கள் மந்திரங்களை மிகச்சுலபமாக பயன்படுத்தி காரியங்களை சாதிக்கிறார்கள்.

எப்போதுமே மந்திரங்களை சுயநலம் இல்லாமல் பாவிக்கும் போது அது நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது சுயநலத்தோடு பாவிக்கும் போது இறைவனுக்கு எதிர்மறையான சாத்தானோடு கொண்டு சேர்க்கிறது என்றும் சொல்லலாம். சாத்தான் என்று நான் இங்கே குறிப்பிடுவது பேய் பிசாசுகளை அல்ல மனதில் உள்ள வக்கிரங்களை ஆகும். 

ஒரு மனிதனோடு நேராக மோதி அவனை தாக்குவதற்கு சக்தியற்ற கோழைத்தனம் நிறைந்த மனிதர்கள் தீய மந்திரங்களை துணைக்கு வைத்துகொண்டு மறைமுகமாக மற்றவர்களுக்கு தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவர்களால் நிச்சயம் இன்பமாக வாழ இயலாது. இந்த வகையில் சொல்லபோனால் உங்கள் குடும்பத்தில் சூன்யம் இருக்கிறது என்றே துணிந்து சொல்லலாம்.

சூன்யம் இருக்கிறது என்றவுடன் அதை யார் செய்தது என்று கேட்பது வாடிக்கை ஒருவேளை பங்காளிகள் அதை செய்திருப்பார்களோ? என்று நாம் உடனடியாக குழம்ப ஆரம்பித்துவிடுகிறோம் இதற்கு காரணம் பங்காளிகளின் மீது நமக்குள்ள சந்தேககங்களாகும். சூன்யம் என்பதை பங்காளிகள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

உதாரணமாக ராஜலஷ்மி அவர்களின் ஜாதகத்தை பார்க்கும் போது இவரது தந்தைவழி பாட்டனார் சிறந்த மந்திரவாதியாக இருந்திருப்பார் என்பதும் அதன் விளைவாக பலருக்கு பல காரியங்களை சாதித்து கொடுத்திருப்பார் என்பதும் தெரிய வருகிறது இந்த ஜாதகத்தை மட்டுமே வைத்து ஆராயும் போது இவ்வளவு மட்டும் தான் தெரியும். இதற்கு மேலும் அதிகமாக தெரிய வேண்டுமானால் நீங்கள் நேரில்வந்தால் தான் இயலும் என்று நினைக்கிறேன் எனவே உடனடியாக நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவரோ நேரில்வந்து என்னை சந்திக்கவும். அப்போது மட்டும் தான் உண்மைகளை தெளிவாக தெரிந்து உங்களுக்கு உதவி செய்ய முடியும்.




தாயார் வெளிநாடு வருவாரா?



   யா நான் இலங்கையை சேர்ந்தவன் கடந்த பத்துவருடமாக கனடா நாட்டில் வாழ்ந்து வருகிறேன் என் சொந்த ஊரில் அம்மாவும் அண்ணனும் இருந்தார்கள் கடந்த வருடம் என் அண்ணன் தீடிரென்று மாரடைப்பால் காலமாகி விட்டார் என் தாயார் மட்டும் அங்கே தனியாக வாழ்கிறார்கள் அவர்களை என்னோடு அழைத்து கொள்ள விரும்புகிறேன் ஆனால் அதற்கான முயற்சிகளை நான் எடுக்கும் போதெல்லாம் ஏதாவது ஒருவகையில் தடை ஏற்படுகிறது அதற்கு என்ன செய்வது என்று புரியவில்லை என் தாய் என்னோடு இருப்பார்களா? அல்லது நான் அவர்களோடு இருப்பதற்கு நாடு திரும்பட்டுமா? என்பதை என் ஜாதகத்தை பார்த்து சொல்லும் படி தாழ்மையோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சிவதாசன்,
கனடா.



    பெற்றவர்கள் எப்படி போனால் என்ன நான் நன்றாக வாழ்கிறேனா அதுமட்டும் போதும் என்று நினைப்பவர்கள் மத்தியில் தாயாரை உங்களோடு வைத்துகொள்ள நினைக்கிறீர்களே அதற்கு முதலில் பாராட்ட வேண்டும் அத்தோடு அவர் வர முடியாவிட்டாலும் நான் அவரோடு சென்று இருக்கட்டுமா என்று கேட்கிறீர்களே அதிலிருந்தே நீங்கள் சிறந்த மனிதன் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நல்ல எண்ணத்திற்கே கடவுள் உங்களை கைவிட மாட்டான் என்று சொல்லலாம்.

ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு நான்காம் இடத்திற்குறியவனுடன் அல்லது நாங்காமாதி நின்ற ராசிக்கு திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருந்தால் அவரது தாயார் கண்டிப்பாக அயல்நாட்டு பயணத்தை மேற்கொள்வார் உங்கள் ஜாதகமும்  அப்படியே அமைந்துள்ளது அதனால் உங்களோடு உங்கள் அம்மா கண்டிப்பாக வருவார் இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்திருங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும்.





அப்பா என்ற பகைவன் !



     குருஜி அவர்களுக்கு வணக்கம் நாங்கள் அண்ணன் தம்பி நான்கு பேர்கள் எனது தகப்பனார் என்னை தவிர மற்ற அனைவரிடமும் அன்பாக இருக்கிறார் அவருக்கு ஏனோ என்னை கண்டாலே சிறிய வயது முதல் ஆகாது இவன் பிறந்து தான் என் சந்தோசங்களை கெடுத்தான் என்று சொல்லி கொண்டே இருப்பார் இத்தனைக்கும் நான் பிறந்த பிறகு தான் சில சொத்துக்களை என் தகப்பனார் வாங்கினார் எனக்கு அவர் மீது கோபமே வரமாட்டேன் என்கிறது அவர் வெறுத்து ஒதுக்கினாலும் அவருக்கான சேவையை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் அவரோ என்னையும் என் மனைவியையும் குழந்தைகளையும் கூட பக்கத்தில் விட மாட்டேன் என்கிறார் இந்த நிலை மாறுமா? என் தகப்பனார் என்னை ஏற்றுக்கொள்வாரா? என்பதை தயவு செய்து சொல்லவும்.


இப்படிக்கு,
ரமேஷ்பிரபா,
காங்கேயம்.





     “பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு” என்று தான் கேள்விபட்டிருக்கிறோம் உங்கள் விஷயத்தில் அது நேர்மாறாக இருக்கிறது இப்படி பட்டவைகளை இறைவன் படைப்பில் உள்ள காரணம் புரியாத விசித்திரங்கள் என்று தான் சொல்ல வேண்டும் பெற்றவர்களை பிள்ளைகள் கவனிக்க மாட்டார்கள் எல்லா பெற்றோரும் பிள்ளைகளை பொறுப்போடு வளர்க்க மாட்டார்கள் என்று கூறி அதற்கான காரண காரியங்கள் பலவற்றை சமூக நோக்கோடு விளக்கினாலும் கூட அதற்கு என்னை பொறுத்தவரை பூர்வ ஜென்ம கர்மாவே மூல காரணம் என்று சொல்லலாம்.

சென்ற பிறவியில் உங்கள் பெற்றோர் உங்கள் மீது விழுந்து விழுந்து அன்பு செலுத்தினாலும் அதை ஏற்று கொள்ளாமல் புறக்கணித்திருப்பீர்கள் அவர்களை மனம் நோகும்படி செய்திருப்பீர்கள் அதற்கான தண்டனையே இப்போது நீங்கள் வலிய சென்று அன்பு செலுத்தினாலும் அதை தகப்பனார் ஏற்று கொள்ளாமல் உங்கள் மனதை காயபடுத்துகிறார். இப்படி நான் நினைக்கிறேன் இது சரியாக கூட இருக்கலாம்.

ஆனால் இந்த உலகில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது என்றால் அது அன்பு ஒன்றே ஆகும். சம்மட்டி கொண்டு அடித்தாலும் உறுதியாக எழுந்து நிற்கின்ற கற்பாறை கூட சின்ன உளிக்கு நெக்கு விட்டுவிடும் என்பது போல அன்பு என்ற ஆயுதம் கரடுமுரடான மனிதனை கூட ஒரே வினாடியில் கீழே வீழ்த்திவிடும். இது தான் உலக உண்மை எனும்போது உங்கள் தகப்பனார் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருப்பாரா என்ன? கண்டிப்பாக மாறுவார் காத்திருங்கள்

இருந்தாலும் ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் ஐந்தாமிடத்து அதிபதி இருக்கிற இடத்திலிருந்து ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் கேது இருந்தால் அவர் தனது குழந்தைகளிடம் பகைமையை பாராட்டுவார் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. உங்கள் தந்தையரின் ஜாதகமும் அப்படி இருக்கிறது எனவே இது அவர் குற்றம் அல்ல அவர் பிறந்த நேரத்தின் குற்றமாகும். கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் கல்லையும் கனிவிக்கும் ஆற்றல் முள்ளையும் மலராக்கும் சக்தி அவன் ஒருவனுக்கே உண்டு.





நடிகராகும் ஜாதக தகுதி



     குருஜி அவர்களுக்கு வணக்கம் ஒருவன் சிறந்த நடிகராக வளர வேண்டுமானால் அவனது ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்?

இப்படிக்கு,
மனோகரன் துணைஇயக்குனர்,
கோடம்பாக்கம்.






    டிப்பது என்ன பெரிய விஷயம் இயக்குனர் சொல்லி கொடுப்பது போல கையை காலை ஆட்டி முகத்தை மாற்றி நடித்து விட்டால் போதும் சிறந்த நடிகராகிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் இப்போதைய காலத்தில் நடிப்பதற்கு நடிப்பு திறமை என்பது அவசியம் அல்ல கையில் பணமிருந்தால் போதும் பெரிய நட்சத்திரமாக பவனி வரலாம் என்று பலர் கனவு காண்கிறார்கள் பட்டபடிப்பு படித்து பதவி வாங்குவது போல நடிப்பு கல்லூரியில் படித்தாலே நடிப்பு வந்துவிடும் என்று சிலர் கருதுகிறார்கள்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல தண்ணீரை போல் காட்சி அளிப்பதெல்லாம் தாகத்தை தீர்த்துவிடாது என்பதை போல நடிப்பவன் அனைவரும் நடிகராகி விட முடியாது. அதற்கென்று சில லட்சணங்கள் இருக்கிறது நடிகராக விரும்புபவனுக்கு நல்ல கற்பனைத்திறன் இருக்க வேண்டும் நான் பிச்சைகாரனாக நடுரோட்டில் நின்று நாலுபேரிடம் கையேந்தினால் எப்படி இருப்பேன் என்று தனியறையில் நடித்து பழகி பார்ப்பவனே திரையில் ஜொலிக்க முடியும். அப்படி பழகி பார்ப்பதற்கு கலை ஆர்வமும் விடா முயற்சியும் புதியனவற்றை கற்றுகொள்ளும் ஆர்வமும் எப்போதும் இருக்க வேண்டும்.

இதுமட்டும் அல்ல ஒரு நல்ல நடிகனுக்கு கூச்ச சுபாவம் என்பது இருக்கவே கூடாது நாலுபேர் முன்னால் காதல் அபிநயம் பிடிக்கும் போது அவர்கள் அப்படி நினைப்பார்களோ இவர்கள் இப்படி நினைப்பார்களோ என்று எண்ணி தயங்குபவனும் எனக்கு எல்லாம் தெரியும் நான் செய்வது தான் சரி என்று நினைப்பவனும் நடிக்க முடியாது. நடிப்பிற்கு அத்தியாசியமான தேவைகளில் ஒன்று தெளிவான உச்சரிப்புடன் கூடிய வசனம் பேசும் திறமை வசனங்களை உடனுக்குடன் பொருள் உணர்ந்து மனப்பாடம் செய்துகொள்ளும் திறமையும் வேண்டும் இன்று நடிக்க வருபவர்களுக்கு இவைகள் எல்லாம் போதாது என்பதனால் தான் மின்னலை போல வருகிற வேகத்தில் மறைந்து போகிறார்கள்

ஒருவர் நடிப்பு துறையில் மின்னலை போல மறையாமல் இருக்க வேண்டுமானால் அவர் ஜாதகத்தில் குரு நின்ற இடத்திற்கு ஒன்று ஐந்து ஒன்பது அல்லது மூன்று எழு பதினொன்று ஆகிய இடங்களில் சுக்கிரன் இருக்க வேண்டுமென்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன புகழ்பெற்ற நடிகர்கள் சிலரின் ஜாதகத்தை பார்க்கும் போது இது சரியென்றே நமக்கும் தோன்றுகிறது. எனவே நடிகராக வெற்றி பெறுபவர்களுக்கு ஜாதக ரீதியில் கிரக பலனும் அவசியமென்று சொல்லலாம்.






பெண்ணையும் பணத்தையும் நாடும் மனது...

 தியானம் செய்யும் போதும், பூஜை செய்யும் போதும் மனம் குவியதில் சிரமம் ஏற்படுவது ஏன்? இது நம்மில் பலருக்கு தினசரி ஏற்படும் கேள்வியாகும்

மாலை பொழுது கதிரவன் மேற்கிலிருந்து மஞ்சள் ஒளியால் கடற்கரை மணற்பரப்பை குளிப்பாட்டி கொண்டிருக்கிறான். 

சந்தன மரத்தில் கடைந்தெடுத்த பதுமை போல் அழகான மாதொருத்தி கடற்காற்றில் கூந்தலும் ஆடையும் வர்ணஜாலம் புரிய நடந்து வருகிறாள். 

கருங்கூந்தல் கற்றைகள் காற்றில் பிரிந்து அவள் மாம்பழ கன்னத்தில் விதவிதமான கோட்டோவியங்களை வரைகின்றது.  


விழிகளை மூடாமல் அவள் அழகை விழுங்கி விடுவது போல் பார்க்கிறீர்கள்

அந்த ரசனையின் இன்ப வேதனை பக்கத்தில் அமர்ந்து இருக்கும் நண்பனை கூட மறக்க செய்கிறது. 

உங்கள் வயது, தகுதி தாரதரம் எல்லாம் மறந்து போய் விடுகிறது.

காற்று அள்ளி வரும் கடற்கரை மணல் கண்களில் வீழ்ந்தால் கூட அது உருத்துவது இல்லை. 

வியாபாரத்தில் பல லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.  கிடைத்த பணத்தை வங்கியில் போட ஒவ்வொரு நோட்டுகளாக எண்ணுகிறோம். 

அருகில் மனைவி வருகிறாள் கவனிக்கவில்லை.  அப்பா கூப்பிடுகிறார் காதில் விழவில்லை.  குழந்தை மிட்டாய் கேட்டு அழுகிறது.  அதுவும் நமது கவனத்தை கவரவில்லை.


 மனம் முழுக்க முழுக்க பணத்தை எண்ணுவதை தவிர வேறு எதிலும் நாட்டம் கொள்ளவில்லை. 

பெண்ணின் அழகை ரசிப்பதிலும் பணத்தை ருசி பார்ப்பதிலும் சிந்தாமல் சிதறாமல் ஒருமைப்பாட்டுடன் இருக்கும் மனம் தியானம் என்று உடகார்ந்த உடன் ஆற்றில் நீச்சல் அடிப்பதையும், கடன்காரன் வருவதையும் நினைத்து நாலாபுறமும் சிதறி ஓடுகிறது. 

இதிலிருந்து என்ன தெரிகிறது? 

நமக்கு எதில் ஆர்வமோ எதில் ஆசையோ அதில் மனது குவிகிறது.  மற்றவற்றில் குவிய மறுக்கிறது.  சண்டித்தனம் பண்ணுகிறது.

தியானத்தை பற்றி நிறைய பேசுகிறோம்.  ஆனால் நமது மனம் அதை முக்கயமானதாக நம்புவது இல்லை. 

அதனால் அசட்டை ஏற்படுகிறது.  இந்த அசட்டை தான் நமது முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரத்தில் பத்து நிமிடத்தை முழுமையாக தியானத்திற்கு ஒதுக்க நம்மால் முடியவில்லை. 

எனவே தியானம் செய்வதற்கு மிக முக்கியமான தேவை மன ஒருமைப்பாடு அல்ல ஆர்வம் மட்டுமே ஆகும்

முதலில் தியானம் செய்ய பூஜை செய்ய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் மனம் தானாக குவியும்.


நல்ல வேலையாள் அமைய பரிகாரம் !



       குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் மும்பையில் ஆயில் கம்பெனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறேன் கைநிறைய சம்பளமும் மற்றும் பல வசதிகளும் இருக்கிறது எவ்வளவு இருந்தாலும் எத்தனை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாலும் ஒருவரிடம் கைநீட்டி ஊதியமாக பெறுவது என்பது அடிமை சேவகமே என்பது என் எண்ணம். தெருவோரத்தில் தள்ளு வண்டியில் பாணிபூரி வியாபாரம் செய்பவன் கூட முதலாளி. நான் காரில் போனாலும் கூலிக்காரன் தான் என்று நினைக்கிறேன் எனவே எனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக வியாபாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன் என் ஜாதகப்படி நான் வியாபாரம் செய்தால் நன்றாக இருக்குமா? அல்லது காலம் முழுவதும் ஒரு வேலைக்காரனாகவே இருக்க வேண்டிய சூழல் இருக்கிறதா? என்பதை தயவு செய்து நன்றாக ஆராய்ந்து எனக்கு சொல்லுமாறு வேண்டுகிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.


இப்படிக்கு,
வெங்கடகிருஷ்ணன்,
மும்பை.




    டித்து முடித்து கல்லூரியிலிருந்து வெளிவருகிற நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் ஏதாவது வேலை கிடைக்காதா? காலம் முழுவதையும் பாதுகாப்போடு நகர்த்திவிட முடியாதா? என்றே யோசிக்கிறார்கள் ஒரு வேலையில் அமரும் போது மாத ஊதியம் இவ்வளவு தான் என்ற உறுதி கிடைத்து விடுகிறது. ஓய்வு பெறுகிற நாள் வரையில் அந்த சம்பளத்தில் குறைவு ஏற்பட்டு விட போவதில்லை இதனால் வாழ்க்கை முறை திடீரென்று சரிந்து விடுமோ? என்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை ஒரு பாதுகாப்போடு வாழலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.

இப்படிப்பட்ட மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் இவர்களுக்கும் கற்பாறைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அதுவும் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் கிடக்கிறது இவர்களும் அப்படியே கிடக்கிறார்கள் என்று எனக்கு தோன்றும் வாழ்க்கை என்றால் கட்டிலில் படுத்து கால்நீட்டி உறங்குவது போல சோம்பேறித்தனமாக இருக்க கூடாது சவால்களை எதிர்நோக்கவும் போட்டிகளை சம்பாதிக்கவும் கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் சிறந்த வாழ்க்கையை இவன் வாழ்ந்தான் என்ற முத்திரையை பதிக்க முடியும்.

இப்படி நான் சொல்வதற்காக சொந்த தொழில் செய்கின்ற பலரும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்று நான் கூற வரவில்லை அவர்களிலும் பலர் ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று உப்புசப்பு இல்லாமல் வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த சங்கதியே. அவர்கள் அப்படி இருப்பதற்கு மூல காரணமும் அதிகப்படியான முயற்சிகள் செய்தால் தோல்வியில் தலைகீழாக விழுந்துவிடுவோமோ என்ற பயமே காரணம். காலம் முழுக்க உத்தியோகம் பார்ப்பதற்கும் செக்குமாடு போல மாற்றமே இல்லாமல் தொழில் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டு வாழ்க்கை முறையுமே ஏறக்குறைய கல்லுக்கு சமமே ஆகும்.

உத்தியோகம் பார்த்தாலும் சரி சொந்த தொழில் செய்தாலும் சரி புதிதாக சிந்திப்பதும் வேகமாக செயல்படுவதும் சாதனைகள் செய்யவேண்டும் என முயற்சிப்பதும் கண்டிப்பாக அவசியம் இவற்றை விட மிக முக்கியமானது நாம் செய்கின்ற செயலில் ஒரு ஆர்வமும் விருப்பமும் திருப்தியும் இருக்க வேண்டும் திருப்தி இல்லாமல் எந்த காரியத்தை செய்தாலும் அது உருப்படாது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான மூலகாரணமே விருப்பத்தோடு செயல்படுவதே ஆகும். அந்த வகையில் உங்கள் இரத்தத்தில் வியாபாரம் செய்வதற்கு உண்டாகி இருக்கும் ஆர்வத்தை உணர முடிகிறது அதை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

நமது விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் இறைவன் நமக்கென்று வகுத்த வழி ஒன்று இருக்கிறது அந்த வழியாக போனால் தான் திருப்தியும் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும் சாதனையும் படைக்கலாம். அதை விட்டு விட்டு நாமாக ஒரு பாதை போட்டு அதில் பயணம் செய்ய முயன்றால் பல நேரங்களில் சிரமங்களே ஏற்படுகிறது ஒருவர் ஜாதகத்தில் நல்ல வியாபாரியாக வரவேண்டும் என்றால் புதனும் செவ்வாயும் ஒன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய ஏதேனும் ஒரு இடத்தில் வலுவோடு இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஜோதிடம் என்பது இறைவன் நமக்கு தந்த பாதையை இன்னெதென்று ஓரளவு அறிந்து கொள்கிற கருவியே ஆகும் அதன் வழிபார்க்க போனால் உங்கள் ஜாதகப்படி வியாபாரம் நன்றாகவே வரும் அதில் நீங்கள் முதலீடு செய்வது எந்த வகையிலும் நஷ்டத்தை தராது ஆனால் அதற்காக நீங்கள் இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அப்போது தான் தொழில் செய்வதற்கான நல்ல நேரம் உங்களுக்கு பிறக்கிறது.

ஜாதகப்படி இந்த இடங்களில் கிரகங்கள் வலுவோடு அமையாமல் வியாபார துறையில் இருப்பவர்கள் அவதிபட்டால் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட வேண்டும் முடிந்தால் வடை மாலையையும் வெண்ணை சாற்றுதலையும் செய்யலாம் இப்படி செய்தால் தொழில் நல்ல முறையில் நடப்பதோடு தொழில் நடத்துவதற்கு மிகவும் தேவையான நல்ல வேலையாட்கள் அமைவார்கள் அப்படியே அமைந்து அடிக்கடி வேலையை விட்டு போகாமல் ஓரளவு நிரந்தரமாக இருப்பார்கள்.